2029-க்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடியே நாட்டை வழிநடத்துவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு அமித் ஷா பதிலளித்தார். தென்னந்தியாவில் பாஜக மிகப் பெரும் எழுச்சியைப் பெறும் என்று தெரிவித்த அவர், 2029-க்கு பிறகும் பிரதமர் மோடியே நாட்டை வழிநடத்துவார் என்றார்.
"தென்னிந்தியாவில் மிகப் பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும். எனது கருத்தில் நான் உறுதியாக நிற்கிறேன். கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கேரளம் மற்றும் தமிழ்நாடு என 5 மாநிலங்களில் வென்ற மொத்த இடங்களைக் கூட்டினால் பாஜக தனிப்பெரும் கட்சியாக இருக்கும். உத்தரப் பிரதேசத்தில் கடந்த முறை வென்றதைக் காட்டிலும் கூடுதல் இடங்களில் வெற்றி பெறுவோம்" என்றார் அமித் ஷா.
அமித் ஷா பிரதமராவார் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியது தொடர்புடைய கேள்விக்குப் பதிலளிக்கையில், "அவர்கள் 22 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறார்கள். அவருடைய கருத்துகளைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை. 2029 வரை பிரதமர் மோடி பிரதமராகத் தொடர்வார். 2029-க்கு பிறகும் பிரதமர் மோடியே நம்மை வழிநடத்தவுள்ளார்" என்றார் அமித் ஷா.
பொது சிவில் சட்டத்துக்கு சில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது பற்றி எழுப்பிய கேள்விக்கு இவர் பதிலளித்ததாவது:
"சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியபோதும் இதுதான் சொல்லப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியபோதும் இதுதான் சொல்லப்பட்டது. ஆனால், இந்த இரண்டும் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. மக்கள் தீர்மானிப்பார்கள். அதனால்தான், நாங்கள் இதை தேர்தலுக்கு முன்பு கூறுகிறோம். இதில் எந்த ரகசியமும் இல்லை" என்றார் அமித் ஷா.