நன்கொடையாளரும், எழுத்தாளருமான சுதா மூர்த்தியை மாநிலங்களவையின் நியமன எம்.பி.யாக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் வாழ்த்தி பதிவிட்டுள்ளதாவது:
"குடியரசுத் தலைவர், சுதா மூர்த்தியை மாநிலங்களவைக்குப் பரிந்துரைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. சமூகப் பணி, நன்கொடை மற்றும் கல்வியில் இவரது பங்களிப்பு மகத்தானது. மாநிலங்களவையில் இவருடைய இருப்பு என்பது, பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கான ஒரு வலிமையான சான்று. நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பெண்களினுடைய திறன் மற்றும் வலிமைக்கான ஓர் எடுத்துக்காட்டு இது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலம் மற்றும் கன்னட இலக்கியங்களில் நிறைய பங்களிப்பை ஆற்றியுள்ள சுதா மூர்த்தி, 2021 டிசம்பரில் இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார். 2023-ல் சமூகப் பணியில் இவரது பங்களிப்புக்காக பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. 2006-ல் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இவர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.