முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரனும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்த நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த 26 அன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் ஹாசன் தொகுதியில் போட்டியிட்ட பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் காணொளிகள் இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து அவர் மீதி உடனடியாக உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, இது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க அரசு முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்தார். இதனிடையே ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து இது தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.