
ஒருவர் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதால் மட்டுமே அவர் நாட்டின் குடிமகனாகிவிட முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாபு அப்துல் ரஃப் சர்தார் என்பவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் போலி ஆவணங்கள் மூலம் பல ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வருவதாகவும் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பிணை கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் பாபு அப்துல் ரஃப் சர்தார்.
இவர் தனது மனுவில், தான் இந்தியக் குடிமகன் என்பதற்கு அங்கீகாரம் பெற்றுள்ளதாகவும் வங்கதேசத்தைச் சேர்ந்தவன் என்பதை நிரூபிப்பதற்கான உரிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தனது ஆவணங்கள் அனைத்தும் வருமான வரி விவரங்கள் மற்றும் தொழில் பதிவேட்டில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் 2013 முதல் தானேவில் வசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், "யார் குடிமகனாக இருக்கலாம் என்பதற்குக் குடியுரிமைச் சட்டம் வழிவகுத்துள்ளது. குடியுரிமையைப் பெறுவதற்கான வழிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவை வெறும் அடையாளத்துக்கானது அல்லது சேவைகளைப் பெறுவதற்கானது மட்டுமே. இவற்றை வைத்திருப்பதால் மட்டுமே ஒருவர் இந்தியக் குடிமகன் ஆகிவிட முடியாது. சட்டபூர்வ குடிமக்கள் மற்றும் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் யார் என்பதைச் சட்டம் தெளிவாக வகுத்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, அவருக்குப் பிணை வழங்க மும்பை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
Bombay High Court | Citizenship Act | Citizen | Indian Citizen | Aadhar Card | Pan Card | Voter ID |