தொழிலதிபர்கள் அம்பானி மற்றும் அதானியிடமிருந்து காங்கிரஸ் பெற்ற நிதி எவ்வளவு என பிரதமர் நரேந்திர மோடி கேள்வியெழுப்பியுள்ளார்.
தெலங்கானாவின் கரிம்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் அம்பானி, அதானியை விமர்சிப்பதில் மௌனம் காப்பது ஏன் என காங்கிரஸை நோக்கி பிரதமர் மோடி கேள்வியெழுப்பினார்.
"தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து ராகுல் காந்தி மற்றும் மற்ற காங்கிரஸ் தலைவர்கள் அம்பானி மற்றும் அதானியை விமர்சிப்பதை நிறுத்திவிட்டார்கள். ஏன் நிறுத்திவிட்டார்கள்? அதானி மற்றும் அம்பானியிடமிருந்து பெற்ற கருப்புப் பணம் எவ்வளவு?
தேர்தலுக்காக அவர்களிடமிருந்து பெற்ற நிதி எவ்வளவு? காங்கிரஸ் இதை தெளிவுபடுத்த வேண்டும்" என்றார் பிரதமர் மோடி.
தொடர்ந்து, முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு குறித்து மீண்டும் வலியுறுத்திப் பேசினார்.
"மதத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள உங்களுடைய இடஒதுக்கீட்டைப் பறித்து, அதைத் தங்களுடைய வாக்கு வங்கிக்கு அளிக்கிறார்கள்" என்று பிரதமர் மோடி பேசினார்.
தெலங்கானாவில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 13-ல் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.