நைஜீரியாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் 2-வது உயரிய விருது வழங்கப்பட உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
5 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக நேற்று (நவ.16) தலைநகர் தில்லியில் இருந்து கிளம்பி, நைஜீரியாவுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டுத் தலைநகர் அபுஜாவில் உள்ள விமான நிலையத்தில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அத்துடன் நைஜீரியா வாழ் இந்திய மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று (நவ.17) நைஜீரிய அதிபர் போலா அஹமது தினுபுவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார் பிரதமர் மோடி. பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம், வணிகம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு குறித்து விவாதித்து, சில அரசு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நைஜீரிய அரசின் Grand Commander of The Order of the Niger என்ற அந்நாட்டின் 2-வது உயரிய விருது வழங்கப்பட உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்குப் பிறகு, இந்த விருதைப் பெறும் 2-வது வெளிநாட்டுத் தலைவர் என்ற பெருமையைப் பெறுகிறார் பிரதமர் மோடி.
இதுவரை சௌதி அரேபியா, ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், மாலத்தீவுகள், பலாவ், ஃபிஜி, பிரான்ஸ், பப்புவா நியூ கினி, எகிப்து, பூடான், ரஷ்யா ஆகிய நாடுகள் பிரதமர் மோடிக்கு அந்நாடுகளின் உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளன.