
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, சௌதி அரேபியா அரசுமுறை சுற்றுப் பயணத்தைப் பாதியிலேயே முடித்துவிட்டு பிரதமர் மோடி அவசரமாக நாடு திரும்பினார்.
கோடை காலம் தொடங்கியுள்ளதால், தற்போது ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் செல்கின்றனர். அங்குள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றான பஹல்காம் புல்வெளிகளுக்குப் பேர் போன இடமாகும், இதனால் ஜம்மு காஷ்மீருக்கு செல்லும் சுற்றுலா பயணிகளில் பெரும்பகுதியினர் பஹல்காமுக்கு செல்வது வாடிக்கையாகும்.
இந்நிலையில், நேற்று (ஏப்.22) பிற்பகல் 3 மணி அளவில் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்குப் பகுதிக்கு ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள், அங்கிருந்த சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 26 பேர் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்குப் பகுதிக்கு வாகனங்களில் சென்றடைய முடியாது, குதிரைகள் உபயோகித்து அல்லது நடைபயணமாக மட்டுமே சென்றடைய முடியும்.
துப்பாக்கிச்சூடு குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்குச் சென்று, தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர். அங்கிருந்த பிற சுற்றுலா பயணிகளை அவர்கள் மீட்டனர்.
இதைத் தொடர்ந்து, நேற்று மாலை ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரைச் சென்றடைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புப் படை உயரதிகாரிகளுடன் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். இன்று (ஏப்.23) காலை பஹல்காமுக்குச் சென்று தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.
அதன்பிறகு, துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பைசரன் பள்ளத்தாக்குப் பகுதிக்கு ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதற்கிடையே, அரசுமுறை சுற்றுப்பயணமாக நேற்று தில்லியில் இருந்து சௌதி அரேபியாவுக்கு கிளம்பிச் சென்ற பிரதமர் மோடி, சுற்றுப்பயணத்தைப் பாதியிலேயே முடித்துவிட்டு இன்று காலை தில்லிக்குத் திரும்பினார். தில்லி பாலம் விமான நிலையத்தில் வைத்து தீவிரவாத தாக்குதல் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில், தாக்குதலின்போது அங்கிருந்த சுற்றுலா பயணிகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.