
பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து போராடுவது அனைத்து உலக நாடுகளின் முக்கிய கடமை என்று சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் உடனான சந்திப்புக்குப் பின் பிரதமர் மோடி தெரிவித்தார்.
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் தில்லியில் உள்ள பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது சிங்கப்பூர் - இந்தியாவுக்கு இடையே உறவை வலுப்படுத்துவது குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, இருநாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர் பிரதமர் மோடி, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் ஆகிய இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, “பதவியேற்ற பிறகு முதன்முறையாக இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை வரவேற்கிறேன். இந்தியா - சிங்கப்பூர் இடையிலான உறவு வளர்ச்சி அடைந்து வருகிறது. தென்கிழக்கு ஆசியாவில், இந்தியா உடன் மிகப்பெரிய வர்த்தக உறவை சிங்கப்பூர் பெற்றுள்ளது செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் மற்றும் பிற டிஜிட்டல் தொழில்நுட்ப துறையில் வளர்ச்சிக்கு இருநாடுகளும் இணைந்து பணியாற்றுவதாக முடிவாகியுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவது அனைத்து நாடுகளின் மனிதாபிமான கடமை என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்திய மக்களுக்கு அனுதாபம் தெரிவித்து, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை ஆதரித்ததற்காக பிரதமர் வோங் மற்றும் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன். எங்கள் உறவுகள் ராஜதந்திரத்திற்கு அப்பாற்பட்டவை. கப்பல் போக்குவரத்து,அணுசக்தி மற்றும் நகர்ப்புற நீர் மேலாண்மை போன்ற துறைகளில் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளோம்” என்று கூறினார்.
PM Modi | Singapore President | Singapore President India Visit | Lawrence Wong | India against Terrorism