
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைத்து, நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி.
ரூ. 8,867 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் மோடி இன்று (மே 2) திறந்து வைத்தார். இந்த விழாவில், கேரள முதல்வர் பினராயி விஜயன், அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி, திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் நிறுவனத்தின் பங்களிப்புடன் இந்த ஆழ்கடல் துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. இந்த துறைமுகத்தின் பெரும்பான்மையான பங்குகள் கேரள அரசு வசம் உள்ளன.
துறைமுகத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் தேசிய நெடுஞ்சாலை, 12 கி.மீ. தொலைவில் முக்கிய ரயில் வழித்தடம், 15 கி.மீ. தொலைவில் திருவனந்தபுரம் விமானநிலையம் ஆகியவை அமைந்துள்ளன. இந்த துறைமுகத்தால் சர்வதேச கடல்சார் வர்த்தகம் மற்றும் கடல் போக்குவரத்தில் இந்தியாவின் பங்களிப்பு உயரும் என்று கூறப்படுகிறது.
இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, ` ஒருபுறம், ஏராளமான வாய்ப்புகள் நிறைந்த இந்த பெரிய கடல் இருக்கிறது, மறுபுறம், அழகு நிறைந்த இயற்கை இருக்கிறது, இடையே இந்த விழிஞ்சம் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகம் அமைந்திருக்கிறது; இது புதுயுக வளர்ச்சியின் அடையாளமாகும்’ என்றார்.
அதேநேரம் காங்கிரஸ், சிபிஎம் தலைவர்கள் முன்னிலையில் இண்டியா கூட்டணியை சாடும் வகையிலும் பிரதமர் பேசினார். `முதலமைச்சரிடம் நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், நீங்கள் இண்டியா கூட்டணியின் வலுவான தூண். சசிதரூரும் இங்கே அமர்ந்திருக்கிறார். இன்றைய நிகழ்வு பலரின் தூக்கத்தைக் கெடுக்கப்போகிறது’ என்றார்.