
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக சௌதி அரேபியாவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
சௌதி அரேபியாவின் பிரதமர் முஹமது பின் சல்மானின் அழைப்பின்பேரில் இன்று (ஏப்.22) காலை தலைநகர் தில்லியில் இருந்து அந்நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி. இந்த அரசுமுறைப் பயணம் தொடர்பாக அவர் கூறியதாவது,
`பட்டத்து இளவரசரும், பிரதமருமான முஹமது பின் சல்மானின் அழைப்பின் பெயரில் சவுதி அரேபியா ராஜ்யத்திற்குச் செல்கிறேன். சமீப ஆண்டுகளில் முக்கியத்துவத்தையும், உத்வேகத்தையும் பெற்றுள்ள சவுதி அரேபியாவுடனான நீண்டகால வரலாற்றுரீதியிலான உறவுகளை இந்தியா பெரிதும் மதிக்கிறது.
பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, மக்களுக்கிடையேயான உறவுகள் போன்றவற்றில், பரஸ்பர நன்மை பயக்கும் ஆக்கப்பூர்வமான கூட்டணியை நாங்கள் ஒன்றாக இணைந்து உருவாக்கியுள்ளோம். பிராந்திய அமைதி, வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியற்றில் ஆர்வத்தையும், அர்ப்பணிப்பையும் பகிர்ந்துகொண்டுள்ளோம்.
கடந்த பத்தாண்டுகளில் சௌதி அரேபியாவிற்கு மூன்றாவது முறையாகப் பயணிக்கிறேன், வரலாற்றுச் சிறப்புமிக்க ஜெட்டா நகருக்கு முதல்முறையாகச் செல்கிறேன். 2023-ல் எனது சகோதரர் இளவரசர் முஹமது பின் சல்மான் மேற்கொண்ட வெற்றிகரமான இந்திய பயணத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ள 2-வது முக்கியத்துவமான கூட்டாண்மைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளேன்.
இரண்டு நாடுகளுக்கும் இடையே வாழும் இணைப்பு பாலமாகவும், கலாச்சாரம் மற்றும் மனித உறவுகளை வலுப்படுத்துவதில் மகத்தான பங்களிப்பைச் செலுத்தி வரும், சவுதி அரேபியா வாழ் துடிப்பான இந்தியச் சமூகத்தினரை சந்திக்க ஆவலாக இருக்கிறேன்’ என்றார்.