
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முப்படைகளின் தளபதி அனில் சௌஹான் ஆகியோருடன் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இன்று (ஏப்.29) பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
பிரதமரின் தில்லி இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ராணுவத் தளபதி உபேந்திர திவேதி, கடற்படைத் தளபதி தினேஷ் கே திரிபாதி, விமானப்படைத் தளபதி அமர் பிரீத் சிங் ஆகியோரும் பங்கேற்றனர். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புத்துறை உயரதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்தியுள்ளதால் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
பிரதமர் மோடி தலைமையில் நாளை (ஏப்.30) பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலை குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று (ஏப்.28) பிரதமர் மோடியிடம் விளக்கினார். இந்த சந்திப்பு 40 நிமிடங்கள் நீடித்தது.
கடந்த 2008-ல் நடைபெற்ற 26/11 மும்பை தாக்குதலுக்கு பிறகு இந்தியாவில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான ஏப்ரல் 22 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களைத் தண்டிக்கும் வழிமுறைகள் குறித்து நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளின் உயரதிகாரிகள் பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் தொடர்புடையவர்கள் மற்றும் அதற்கான சதித் திட்டத்தை தீட்டியவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று அண்மையில் ஒலிபரப்பான 121-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.