ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக ஷபீர் என்பவர் கர்நாடகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவிலுள்ள ராமேஸ்வரம் கஃபேவில் மார்ச் 1-ல் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வருகிறது. வழக்கில் தொடர்புடைய நபரின் புகைப்படங்கள், சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவற்றை என்ஐஏ வெளியிட்டது. மேலும், சம்பந்தப்பட்ட நபர் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும், தகவல் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் என்றும் என்ஐஏ கடந்த 6-ம் தேதி அறிவித்தது.
இந்த நிலையில், குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக பல்லாரியில் ஷபீர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவிலுள்ள என்ஐஏ அலுவலகத்தில் இவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இவருடைய பயணங்கள் தொடர்பாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இருந்தபோதிலும், சிசிடிவி காட்சிகளில் இடம்பெற்ற நபர்தானா இவர் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.