
பாஜக கூட்டணியில் இணைந்த பிறகு ஹிந்தித் திணிப்பு விஷயத்தில் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது எழும் விமர்சனங்களுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஜனசேனா கட்சியின் 12-வது ஆண்டு விழா காக்கிநாடா மாவட்டத்தில் நடைபெற்றது. கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண், ஹிந்திக்கு எதிரான நிலைப்பாடு உள்ள தமிழக அரசியல்வாதிகள், தமிழ்ப் படங்களை ஹிந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிட அனுமதிப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். அந்தக் கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது: நாட்டுக்கு இரு மொழிகள் மட்டுமல்ல, பல மொழிகள் தேவை. மொழி ரீதியான பன்முகத்தன்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அது நாட்டில் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் வளர்க்கும். சிலர் சம்ஸ்கிருதத்தை ஏன் விமர்சிக்கிறார்கள் என்று புரியவில்லை. வணிக நோக்கத்துக்காக தமிழ்ப் படங்களை ஹிந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிட அனுமதிக்கும் தமிழக அரசியல்வாதிகள், ஹிந்தியை மட்டும் எதிர்ப்பது ஏன்? பாலிவுட்டிலிருந்து கிடைக்கும் பணம் வேண்டும். ஆனால், ஹிந்தி தேவையில்லையா? இது என்ன மாதிரியான தர்க்கம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பவன் கல்யாணின் இந்தப் பேச்சுக்குத் தமிழ்நாட்டு மக்கள், சமூகவலைத்தளங்களில் எதிர்வினையாற்றி வருகிறார்கள். எம்.பி. கனிமொழி, நடிகர் பிரகாஷ் ராஜ் உள்பட பலரும் பவன் கல்யாணின் பேச்சை விமர்சித்துள்ளார்கள். இந்தியாவின் கலாசார பன்முகத்தன்மையை வடமாநில அரசியல் கட்சி தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று 2017-ல் பவன் கல்யாண் பேசியதை கனிமொழி பகிர்ந்திருந்தார். இதற்கு பவன் கல்யாண் விளக்கம் அளித்துள்ளார். எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் கூறியதாவது:
ஒரு மொழியை வலுக்கட்டாயமாகத் திணிப்பதோ அல்லது ஒரு மொழியைக் குருட்டுத்தனமாக எதிர்ப்பதோ இரண்டுமே நமது பாரதத்தின் தேசிய மற்றும் கலாசார ஒருங்கிணைப்பின் நோக்கத்தை அடைய உதவாது.
ஹிந்தியை ஒரு மொழியாக நான் ஒருபோதும் எதிர்த்ததில்லை. அதைக் கட்டாயமாக்குவதை மட்டுமே நான் எதிர்த்தேன். புதிய கல்விக் கொள்கை 2020 ஹிந்தியைக் கட்டாயப்படுத்தாதபோது, அதன் திணிப்பு குறித்து தவறான தகவல்களைப் பரப்புவது பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் முயற்சியே தவிர வேறில்லை.
மாணவர்களுக்குத் தேர்வு செய்யும் திறனை மேம்படுத்தவும் தேசிய ஒற்றுமையை ஊக்குவிக்கவும் இந்தியாவின் வளமான மொழியியல் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கவும் பல மொழிக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையைத் தவறாக விளக்கி, அரசியல் நோக்கத்திற்காகப் பயன்படுத்துவது அல்லது எனது நிலைப்பாட்டை நான் மாற்றியுள்ளேன் எனத் தவறாக கூறுவது, மொழிக் கொள்கையைப் பற்றிய புரிதலின்மையையே காட்டுகிறது என்றார்.