
முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வயது மூப்பினால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் தில்லியில் இன்று (டிச.26) காலமானார்.
1932-ல் அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த கஹ் கிராமத்தில் (தற்போது பாகிஸ்தான்) குருமுக் சிங், அம்ரித் கவுர் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் மன்மோகன் சிங். இந்திய சுதந்திரத்தை ஒட்டி ஏற்பட்ட பிரிவினைக்குப் பிறகு மன்மோகன் சிங் குடும்பம் முதலில் ஹல்த்வானிக்கும், பிறகு அமிர்தசரஸுக்கும் குடிபெயர்ந்தது.
அமிர்தசரஸின் ஹிந்து கல்லூரியில் பொருளாதார பட்டப்படிப்பை முடித்த மன்மோகன் சிங், பிறகு ஹோஷியார்பூரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியில் முதுகலை பொருளாதாரப் படிப்பை முடித்தார். இதனைத் தொடர்ந்து லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டு பொருளாதாரப் படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பினார்.
சில காலம் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பிறகு, 1960-ல் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார் மன்மோகன் சிங். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு 1951-1960 காலகட்டத்தில் நடைபெற்ற ஏற்றுமதிகள் மற்றும் அது சார்ந்த அரசு கொள்கைகள் குறித்து ஆய்வு செய்து அவர் முனைவர் பட்டம் பெற்றார்.
அதன்பிறகு, 1963 முதல் 1965 வரை சண்டிகர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார் மன்மோகன் சிங். இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்த ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தக அமைப்பில் (UNCTAD) சுமார் மூன்றாண்டு காலம் அவர் பணியாற்றினார்.
வர்த்தகம் சார்ந்த பொருளாதார விவகாரத்தில் மன்மோகன் சிங்குக்கு இருந்த ஆழ்ந்த அறிவு காரணமாக அன்றைய பிரதமர் இந்தியா காந்தி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் அயலக வர்த்தக அமைச்சராக இருந்த லலித் நாராயண் மிஸ்ராவின் ஆலோசகராக 1971 முதல் 1972 வரை பணியாற்றினார் மன்மோகன் சிங்.
அதனைத் தொடர்ந்து, 1972 முதல் 1976 வரை மத்திய நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றினார் மன்மோகன் சிங். இதற்குப் பிறகு 1976 முதல் 1980 வரை நிதி அமைச்சகத்தின், பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலராகப் பணியாற்றிய மன்மோகன் சிங், அணுசக்தி ஆணையம் மற்றும் விண்வெளி ஆணையத்தின் உறுப்பினராகவும் செயல்பட்டார்
பின்னர் 1980 முதல் 1982 வரை மத்திய திட்டக்குழுவின் உறுப்பினர் செயலராகவும், 1982 முதல் 1985 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் 15வது ஆளுநராகவும் பணியாற்றினார் மன்மோகன் சிங். ரிசர்வ் வங்கி ஆளுநர் என்ற முறையில் வங்கிகள் தொடர்பான பல்வேறு சட்டரீதியிலான சீர்திருத்தங்களை அவர் முன்னெடுத்தார்.
பிறகு 1985 முதல் 1987 வரை மத்திய திட்டக்குழுவின் துணைத் தலைவராகவும், அதன்பிறகு அன்றைய இந்தியப் பிரதமர் சந்திரசேகரின் பொருளாதார ஆலோசகராகவும் செயல்பட்டார் மன்மோகன் சிங். பின்னர், 1991-ல் நான்கு மாத காலம் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) தலைவராகப் பதவி வகித்தார்.
தொடர்ந்து 20 ஆண்டுகள் பல்வேறு மத்திய அரசுப் பதவிகளில் திறம்படப் பணியாற்றிய மன்மோகன் சிங்கின் திறமையை அங்கீகரிக்கும் வகையில், 1991-ல் அமைந்த பி.வி. நரசிம்மராவின் தலைமையிலான மத்திய காங்கிரஸ் அரசில் நிதி அமைச்சர் பதவி மன்மோகன் சிங்குக்கு வழங்கப்பட்டது.
தேர்தலில் பங்கேற்காமல் நேரடியாக அமைச்சராகியிருந்த மன்மோகன் சிங் 1991 செப்டம்பரில் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு முதல்முறையாகத் தேர்வானார்.
மத்திய நிதி அமைச்சராக மன்மோகன் சிங் பொறுப்பேற்றபோது இந்தியப் பொருளாதார நிலை மிகவும் மோசமான கட்டத்தில் இருந்தது. வெறும் 2 வார இறக்குமதிகளை ஈடுகட்டும் வகையில், அன்னிய செலவாணி கையிருப்பாக 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே ரிசர்வ் வங்கி வசம் இருந்தது.
நாட்டின் பொருளாதார நிலைமையை பிரதமர் நரசிம்மராவிடம் எடுத்துக் கூறி, இந்தியாவில் அந்நிய முதலீடு மேற்கொள்ளும் வகையிலான அனுமதியை மத்திய அரசு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். ஆனால் இதற்குக் காங்கிரஸ் கட்சிக்குள் பலமான எதிர்ப்பு இருந்தது. எனினும் மன்மோகன் சிங் மீது இருந்த நம்பிக்கையில் அவருக்கு அனுமதி அளித்தார் பிரதமர் ராவ்.
LPG என்கிற தாராளமயமாக்கல் கொள்கையின் அடிப்படையில், இந்திய பொருளாதாரத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு (FDI) அனுமதி அளிக்கும் வகையிலான திட்டத்தைச் செயல்படுத்தினார் மன்மோகன் சிங். அத்துடன் மத்திய பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் திட்டமும் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டது.
சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்தியப் பொருளாதாரத்தை சந்தைப் பொருளாதார கட்டமைப்பை நோக்கி நகர்த்தி, அதை மீட்டெடுத்த சாதனை மன்மோகன் சிங் வசமானது. இதைத் தொடர்ந்து 1996-ல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தாலும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினராக நாடாளுமன்றத்தில் பணியாற்றினார் மன்மோகன் சிங்.
1998 முதல் 2004 வரை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார். 2004 மக்களவை பொதுத்தேர்தலில் 145 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைத்தது காங்கிரஸ் கட்சி. 22 மே 2004-ல் இந்திய பிரதமராகப் பொறுப்பேற்றார் மன்மோகன் சிங்.
இதன் மூலம் இந்தியப் பிரதமரான முதல் சீக்கியர் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரரானார் மன்மோகன் சிங். 2009 மக்களவை பொதுத்தேர்தலுக்குப் பிறகு மீண்டும் இரண்டாவது முறையாகப் பிரதமரான மன்மோகன் சிங் 2014 வரை அப்பதவியில் இருந்தார்.
ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, நரேந்திர மோடி ஆகியோருக்குப் பிறகு அதிக ஆண்டுகள் இந்தியப் பிரதமர் பதவியில் இருந்த நபர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் மன்மோகன் சிங்.
அவரது 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் தேசிய ஊரக சுகாதார திட்டம், கல்வி உரிமைச் சட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் (100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம்) என வெகுஜன மக்களின் நலனுக்காக பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டது மத்திய அரசு.
சர்வதேச அணுசக்தி கழகத்துடன் இணைந்து அணுசக்தியை அமைதி வழியில் இந்தியா பயன்படுத்துவதற்கு வழிவகை செய்யும் ஒப்பந்தத்தை, 2006-ல் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷுடன் இணைந்துக் கையெழுத்திட்டார் மன்மோகன் சிங். இன்று வரை இந்த ஒப்பந்தம் அவரது ஆகச்சிறந்த சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
பத்ம விபூஷண் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்றுள்ள மன்மோகன் சிங்குக்கு, 15-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளன.
1991 முதல் 2024 வரை தொடர்ந்து 34 வருடங்கள் மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றிய மன்மோகன் சிங், கடந்த ஏப்ரல் மாதத்தில் மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெற்றார். முதல் 5 முறை அஸ்ஸாமில் இருந்தும், கடைசி முறை ராஜஸ்தானில் இருந்தும் மாநிலங்களவை உறுப்பினராக அவர் தேர்வாகியிருந்தார்.
மன்மோகன் சிங்குக்கு குருஷரண் கவுர் என்கிற மனைவியும், உப்பிந்தர் சிங், தமன் சிங், அம்ரித் சிங் என மூன்று மகள்களும் உள்ளனர். வயது மூப்பினால் ஏற்பட்ட உடல் நலக்கோளாரால் டிச.26-ல் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணிநேரங்களில் உயிரிழந்தார்.