நாடாளுமன்ற மக்களவை (கோப்புப்படம்)
நாடாளுமன்ற மக்களவை (கோப்புப்படம்)https://www.youtube.com/@SansadTV

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை ஒத்திவைப்பு | Parliament |

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அமளி...
Published on

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்திய நாடாளுமன்றம் கடந்த ஜூலை 21 - ஆகஸ்ட் 21 வரையிலான மழைக்கால கூட்டத்தொடருக்குப் பிறகு இன்று குளிர்காலக் கூட்டத்தொடருக்காக மீண்டும் கூடியது. இன்று முதல் டிசம்பர் 19 வரை நடக்கவுள்ள கூட்டத்தொடரில் அணுசக்தி மசோதா-2025, இந்திய உயா் கல்வி ஆணைய மசோதா, காப்பீட்டு சட்டத் திருத்த மசோதா -2025 உட்பட 14 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உரசல், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் சார்ந்த பிரச்னைகள், புதிய தொழிலாளர் சட்டங்கள், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட முக்கிய விவாதங்களும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மத்தியில் இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின. மொத்தம் 15 அமா்வுகள் இடம்பெறவுள்ளன.

முன்னதாக நேற்று (நவ.30) நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில், “குளிா்கால கூட்டத் தொடரின் பிற்பகல் அமா்வு சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான விவாதத்துடன் தொடங்க வேண்டும்; இல்லையெனில், அவை இடையூறுகளுக்கு அரசே பொறுப்பு” என்று மத்திய அரசிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இந்நிலையில், இன்று கூட்டத்தொடர் கூடியது. அதற்கு முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தின் முன் செய்தியாளர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அவர் கூறியதாவது:-

“தோல்வியால் ஏற்படும் விரக்திக்கான போர்க்களமாகவோ, வெற்றிக்குப் பிறகு ஆணவத்திற்கான களமாகவோ குளிர்காலக் கூட்டத்தொடர் மாறக்கூடாது என்று அனைத்துக் கட்சிகளையும் நான் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் பிரதிநிதிகளாக, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் அதே வேளையில், நாட்டு மக்களின் பொறுப்பு மற்றும் எதிர்பார்ப்புகளை மிகுந்த சமநிலையுடனும் பொறுப்புடனும் கையாள வேண்டும். இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நாட்டிற்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவது அவசியம். எதிர்க்கட்சிகள் அவர்களின் பொறுப்பை உணர்ந்து முக்கிய பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும். துரதிஷ்டவசமாக தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள், அந்த ஏமாற்றத்தைக் கடக்க வேண்டும். முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் இளம் உறுப்பினர்களும் தங்கள் திறமைகளை நிரூபிக்க வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இவற்றைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

அதன்பின் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

Summary

As the winter session of Parliament convened today, the Lok Sabha was adjourned due to uproar from the opposition parties.

logo
Kizhakku News
kizhakkunews.in