
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருவதாக மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. கடந்த மூன்று நாள்களாகப் போர் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வந்த நிலையில், இரு நாடுகளும் போரை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எக்ஸ் தளப் பக்கத்தில் அறிவித்தார். பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தார் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் போர் நிறுத்தத்தை உறுதி செய்தார்.
இந்தியா தரப்பில் மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி மாலை 6 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்து போர் நிறுத்தை உறுதி செய்தார்.
விக்ரம் மிஸ்ரி கூறியதாவது:
"பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) இன்று (மே 10) பிற்பகல் 3:35 மணிக்கு இந்திய இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரலை தொலைபேசியில் அழைத்துப் பேசினார். இந்திய நேரப்படி மாலை 5 மணி தொடங்கி நிலம், வான்வழி மற்றும் கடல் என அனைத்து தடங்களிலும் துப்பாக்கிச் சூடு மற்றும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்காக இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டது. இந்த புரிதலை செயல்படுத்த இரு தரப்பினருக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இரு நாடுகளின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் ஜெனரல்கள் மே 12-ம் தேதி 12.00 மணியளவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்" என்றார் விக்ரம் மிஸ்ரி.
இதனால், ஜம்மு-காஷ்மீர் மற்றும் மேற்குப் பகுதியில் உள்ள எல்லை மாநிலங்களில் சனிக்கிழமை இரவு இருள் சூழாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் போர் நிறுத்த முடிவை மீறி மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளது.
விக்ரம் மிஸ்ரி இரவில் மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்து நிலைமையை விளக்கமளித்தார்.
"இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ராணுவச் செயல்பாடுகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் சனிக்கிழமை மாலை அடைந்த புரிதல்களை மீறும் வகையில் கடந்த சில மணி நேரங்களாக தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இன்று மாலை ஒப்புக்கொண்டதை மீறும் செயல் இது. இந்தியப் படைகள் தக்க பதிலடியைக் கொடுத்து வருகிறது. இந்த மீறல்களை மிகமிக தீவிரமாக கவனத்தில் கொள்கிறோம்.
இந்த விதிமீறல்களைச் சரி செய்ய பாகிஸ்தான் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தீவிரத்தன்மையுடனும் பொறுப்புடனும் நிலைமையைக் கையாள வேண்டும்.
இந்தியப் படைகள் தீவிர கண்காணிப்பில் உள்ளன. சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் பாகிஸ்தான் விதிமீறல்களில் ஈடுபட்டால், அவற்றைக் கடுமையாக எதிர்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார் விக்ரம் மிஸ்ரி.