
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தானில் இருந்து மேற்கொள்ளப்படும் எந்தவொரு சைபர் தாக்குதலையும் எதிர்கொள்ளும் வகையில், இந்திய வங்கிகள் தயார் நிலையில் உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
எல்லையோரப் பகுதிகளில் அமைந்துள்ள ஏடிஎம்களில் பாதுகாப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிடிஐ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. எந்தவொரு சைபர் தாக்குதலையும் எதிர்கொள்ளும் வகையில் 24 மணி நேர போர்க்கால கட்டுப்பாட்டு அறை செயல்படுவதாக பஞ்சாப் தேசிய வங்கியின் மேலாண் இயக்குநரும், தலைமை செயலர் அதிகாரியுமான அசோக் சந்திரா தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், பணப் பற்றாக்குறை நிலைமையைத் தவிர்க்கும் வகையில், எல்லையோரப் பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து ஏடிஎம்களிலும், போதுமான அளவில் பணம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், வங்கிகளில் பணியாற்றும் பணியாளர்களின் பாதுகாப்புக்காக கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிடிஐ ஊடகத்திற்கு மூத்த வங்கி அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
வங்கிகள் மட்டுமல்லாமல், பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் சைபர் தாக்குதல் தொடர்பாக மும்பை பங்குச்சந்தை எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசின் இந்திய கணினி அவசரகால மீட்பு அமைப்பு (CERT In) விடுத்த சைபர் தாக்குதல் எச்சரிக்கைக் குறிப்பின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் வாட்ஸ் அப், இன்ஸ்டகிராம், டெலிகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும்போது தனிநபர்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்பின் தெரியாத எண்கள் அல்லது சமூக வலைதளக் கணக்குகள் வழியாக அனுப்பப்படும் இணைப்புகள் மூலம் சைபர் தாக்குதலுக்கு ஆளாகும் அபாயம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.