எல்லையில் தொடர்ச்சியாக 8-வது நாளாக பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு!

740 கி.மீ. நீளமுள்ள இந்த எல்லையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய ராணுவம் தக்க முறையில் பதிலடி கொடுத்தது.
எல்லையில் தொடர்ச்சியாக 8-வது நாளாக பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு!
ANI
1 min read

இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி தொடர்ச்சியாக 8-வது நாளாக பாகிஸ்தான் ராணுவம் நேற்று (மே 2) இரவு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், நௌஷேரா மற்றும் அக்னூர் பகுதிகளுக்கு எதிரே உள்ள பாகிஸ்தான் பகுதியில் இருந்து சிறிய ரக துப்பாக்கிகள் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 740 கி.மீ. நீளமுள்ள இந்த எல்லையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய ராணுவம் தக்க முறையில் பதிலடி கொடுத்தது.

கடந்த வாரம் (ஏப்.22) ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக ஏப்.24-ல் இந்தியா அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக, ஜம்மு காஷ்மீருடனான எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தினமும் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது.

கடந்த செவ்வாய் (ஏப்.29) அன்று ராணுவ நடவடிக்கைகளுக்கான இரு நாட்டு இயக்குநர்களும் தொலைபேசி வாயிலாக உரையாடினார்கள். அப்போது பாகிஸ்தான் ராணுவம் நடத்திவரும் அத்துமீறல்களுக்கு, இந்திய தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையில் துப்பாக்கிச் சூடு அதிகரிக்கும் பட்சத்தில், அங்கு வசிக்கும் பொதுமக்கள் தனிப்பட்ட பதுங்கு குழிகளை வசிப்பதற்கு ஏதுவாக அவற்றை சுத்தம் செய்யத் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள ஆர்.எஸ். புரா மற்றும் அர்னியா பகுதிகளில் பயிர்களை அறுவடை செய்யும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இருப்பினும், கத்துவா, சம்பா, ரஜோரி, பூஞ்ச் ​​மாவட்டங்களில் இன்னும் அறுவடை நடந்து வருகிறது. இந்த பணியில் ஈடுபடும் பொதுமக்கள் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in