
பாகிஸ்தான் எல்லைக்குள் முஸாபராபாத், கோட்லி மற்றும் பஹாவல்பூரின் அஹமது கிழக்குப் பகுதி என மூன்று இடங்களில் இந்திய ஏவுகணைத் தாக்குதல் நிகழ்ந்ததாக பாகிஸ்தான் இராணுவம் உறுதிப்படுத்தியதாக எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் முகாம்களைக் குறிவைத்து ஆப்ரேஷன் சிந்தூர் என்கிற பெயரில் இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதலை நிகழ்த்தியுள்ளது.
நள்ளிரவு 1.44 மணியளவில் ஏவப்பட்ட ஏவுகணைகள் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்கியுள்ளன. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளார்கள். 12 பேர் படுகாயம்.
பாகிஸ்தான் ராணுவத் தளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை. பஹல்காம் தாக்குதலுக்கு நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும் எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானின் லெப்டினன்ட் ஜெனரல் (டிஜி ஐஎஸ்பிஆர்) அஹமது ஷெரிப் செளத்ரி, செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்துக் கூறுகையில், இந்த தாக்குதல்களில் ஒரு குழந்தை இறந்துள்ளது. ஓர் ஆணும் பெண்ணும் பலத்த காயமடைந்துள்ளார்கள். பஹாவல்பூரின் அஹமது கிழக்குப் பகுதியில் உள்ள சுபானுல்லா மசூதி, கோட்லி மற்றும் முஸாபராபாத்தில் மூன்று இடங்களில் வான்வழித் தாக்குதல்களை இந்தியா நடத்தியது என்று கூறினார்.
பதிலுக்கு பாகிஸ்தான் விமானப்படை, ஜெட் விமானங்களை அனுப்பியதை அவர் உறுதிப்படுத்தினார். "எங்கள் விமானப்படை ஜெட் விமானங்கள் அனைத்தும் வான்வழியில் உள்ளன. இந்தியாவின் தாக்குதல் இந்திய வான்வெளியில் இருந்து நடத்தப்பட்டது. அவர்கள் ஒருபோதும் பாகிஸ்தானின் இடத்திற்குள் ஊடுருவ அனுமதிக்கப்படவில்லை. பாகிஸ்தான் உரிய நேரத்தில் இதற்குப் பதிலடி கொடுக்கும் என்றார்.