
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வால் தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்களுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்.22-ல் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்தனர். குறிப்பாக, தேனிலவு கொண்டாட தன் மனைவி ஹிமான்ஷியுடன் பஹல்காமிற்குச் சென்றிருந்த கடற்படை அதிகாரி வினய் நர்வால் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதைத் தொடர்ந்து கடந்த வாரம் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த ஹிமான்ஷி,
`வினய் எங்கிருந்தாலும் நிம்மதியாக இருக்கவேண்டும். முழு தேசமும் அவருக்காக பிரார்த்தனை செய்யவேண்டும் என்றே விரும்புகிறேன். இஸ்லாமியர்கள், காஷ்மீரிகள் மீது வெறுப்பை பரப்பவேண்டாம்; நாங்கள் அமைதியை விரும்புகிறோம். எங்களுக்கு நீதி வேண்டும்; தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும்’ என்றார்.
ஹிமான்ஷி தெரிவித்த கருத்துகளுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேர எழுந்தது. தனிப்பட்ட முறையில் அவரை விமர்சிக்கும் விதமாக பல்வேறு இணையவாசிகள் கருத்துகளைப் பதிவிட்டனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தின் எக்ஸ் கணக்கில் வெளியிட்ட பதிவில்,
`லெப்டினன்ட் வினய் நர்வாலின் மரணத்திற்குப் பிறகு, அவரது மனைவி ஹிமான்ஷி நர்வால் தெரிவித்த கருத்துகளுக்கு சமூக ஊடகங்களில் வெளியான விமர்சனங்கள் துரதிர்ஷ்டவசமானது மட்டுமல்லாமல், கண்டிக்கத்தக்கது. கருத்தை வெளிப்படுத்தியதற்காக அல்லது தனிப்பட்ட வாழ்க்கைக்காக ஒரு பெண்ணை இவ்வாறு குறிவைப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.