"உங்களைக் கொல்ல மாட்டோம், மோடியிடம் சொல்லுங்கள்": பெண்ணிடம் கூறிய பயங்கரவாதி!

"என் கணவரைக் கொன்றுவிட்டீர்கள், என்னையும் கொன்றுவிடுங்கள் என்று கேட்டேன்."
"உங்களைக் கொல்ல மாட்டோம், மோடியிடம் சொல்லுங்கள்": பெண்ணிடம் கூறிய பயங்கரவாதி!
ANI
1 min read

பஹல்காம் தாக்குதல் பற்றி மோடியிடம் சென்று கூறுமாறு பயங்கரவாதிகள் சொன்னதாக கணவரை இழந்து உயிர் தப்பிய பல்லவி என்பவர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் என்ற சுற்றுலாத் தலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்தத் தாக்குதலல் கர்நாடகத்திலிருந்து சுற்றுலாவுக்குச் சென்றிருந்த மஞ்சுநாத் என்பவர் கொல்லப்பட்டார்.

இவருடைய மனைவி பல்லவி கன்னட ஊடகத்திடம் தொலைபேசி வாயிலாகப் பேசுகையில், "நாங்கள் பஹல்காமில் இருந்தோம். என் கண்முன்னே கணவர் உயிரிழந்தார். என்னால் அழ முடியவில்லை, எப்படி உணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் எனத் தெரியவில்லை. நடந்தவற்றை விவரிக்க முடியவில்லை.

கர்நாடகத்தின் ஷிவமோகாவிலிருந்து கணவர் மஞ்சுநாத் மற்றும் மகன் அபிஜெயாவுடன் இங்கு வந்தேன்.

கார் ஓட்டுனர் உதவியுடன் வந்தேன். அவர் நல்ல மனிதர். ஹிந்துக்கள் குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டதாக அவர் கூறினார். பிஸ்மில்லா என்று கூறிய மற்ற மூவர் எங்களைப் பாதுகாப்பாக மீட்டார்கள். என் கணவரின் உடல் விமானம் மூலம் கர்நாடகம் கொண்டு வரப்பட வேண்டும். நாங்கள் மூவரும் ஒன்றாகத் திரும்ப வேண்டும்.

மூன்று முதல் நான்கு பயங்கரவாதிகள் இருந்தார்கள். என் கணவர் கொல்லப்பட்டவுடன், என் கணவரைக் கொன்றுவிட்டீர்கள், என்னையும் கொன்றுவிடுங்கள் என்று கேட்டேன். என் மகனும் என் தந்தையைக் கொன்றுவிட்டீர்கள், எங்களையும் கொன்றுவிடுங்கள் என்றான். உங்களைக் கொல்ல மாட்டோம், மோடியிடம் சென்று சொல்லுங்கள் என்று பயங்கரவாதி ஒருவர் பதிலளித்தார்.

பயங்கரவாதிகள் எங்கள் முன்னாடி தான் இருந்தார்கள். அவர்கள் ராணுவ சீருடையில் இல்லை. ஆண்கள் அனைவரையும் பெரும்பாலும் குறிவைத்தார்கள். புதிதாகத் திருமணமானவர்கள் பலர் இருந்தார்கள். பெரும்பாலும், கணவர்கள் மட்டும் கொல்லப்பட்டார்கள். பெண்களும் மற்றவர்களும் விடுவிக்கப்பட்டார்கள். ஹிந்துக்கள் தான் குறிவைக்கப்பட்டார்கள். அங்கு 500 சுற்றுலாப் பயணிகள் இருந்திருப்பார்கள்.

என் மகன் காலையிலிருந்து எதுவும் சாப்பிடாததால் அவருக்கு ரொட்டி வாங்குவதற்காக என் கணவர் கடைக்குச் சென்றார். துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடன் ராணுவ வீரர்கள் தான் சுடுகிறார்கள் என முதலில் நினைத்தோம். மக்கள் ஓட ஆரம்பித்தார்கள். என் கணவர் ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து கிடந்தார். அவர் தலையில் சுடப்பட்டிருந்தார்.

என் சொந்த ஊர் ஷிவமோகாவுக்குச் செல்ல வேண்டும். தனியாகச் செல்ல முடியாது, கணவரின் உடலுடன் தான் செல்வேன். இதற்கான உரிய ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும்" என்று பல்லவி கேட்டுக்கொண்டார்.

மஞ்சுநாத் என்பவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இவருடைய மனைவி பல்லவி வங்கியில் மேலாளராக உள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in