
மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் கடந்த ஜூன் 9-ல் தொடர்ந்து மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றார் நரேந்திர மோடி.
இந்நிலையில் மோடி அரசில் நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன் புதிய அரசின் முதல் பட்ஜெட்டை நேற்று (ஜூலை 23) மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீஹார் மாநிலங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டிருந்தன.
இதை அடுத்து, `மத்திய பட்ஜெட்டில் இண்டியா கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம் ஆளும் ஆந்திரா, ஐக்கிய ஜனதாதளம் ஆளும் பீஹாருக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன, எனவே இதைக் கண்டித்து ஜூலை 24-ல் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தப்படும்’ என்று இண்டியா கூட்டணிக் கட்சிகள் நேற்று அறிவித்தன.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் இன்று (ஜூலை 24) காலை நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தை நடத்தினார்கள் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள். அப்போது `தமிழ்நாட்டுக்கு நிதி எங்கே?, இது பாராபட்சமான பட்ஜெட், தேசிய ஜனநாயக கூட்டணி இந்தியாவைப் புறக்கணித்துவிட்டது, தமிழ்நாடும் இல்லை திருக்குறளும் இல்லை’ போன்ற பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
போராட்டத்தின்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கே, `இது ஒரு வஞ்சகமான பட்ஜெட். இது மத்திய அரசின் அநீதியான செயல்’ என்று பேட்டியளித்தார்.
இதற்குப் பிறகு நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளில் பங்கேற்றன எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள். அப்போது மாநிலங்களவையில் பேசிய மல்லிகார்ஜூன் கார்கே, `மத்திய பட்ஜெட்டில் பாராபட்சம் காட்டப்பட்டுள்ளது’ என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
நேற்று, `நரேந்திர மோடியின் அரசு இன்னமும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடங்கவில்லை. 2021-ல் தொடங்கியிருக்க வேண்டிய பத்தாண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை’ என்று குற்றம்சாட்டியிருந்தார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்