கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிக்குச் செல்லாத எம்.பி. யூசுப் பதான்: சொந்தக் கட்சியினர் எதிர்ப்பு!

எளிதான மதிய வேளைகள், நல்ல தேநீர், அமைதியான சூழல். இந்த தருணத்தில் மூழ்கியிருக்கிறேன்.
கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிக்குச் செல்லாத எம்.பி. யூசுப் பதான்: சொந்தக் கட்சியினர் எதிர்ப்பு!
ANI
1 min read

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. யூசுப் பதான் அங்கு செல்லாததை முன்வைத்து அவருக்கு எதிர்க்கட்சியினருடன், சொந்தக் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

வக்ஃபு திருத்த சட்டத்தைக் கண்டித்துக் கடந்த ஏப்.11-ல் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. ஒரு கட்டத்தில் போராட்டம் கலவரமாக உருமாறி, அதில் 3 பேர் உயிரிழந்தனர். கலவரம் தொடர்பாக இதுவரை 270-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கலவரம் நடைபெற்றதற்கு அடுத்த நாள், `எளிதான மதிய வேளைகள், நல்ல தேநீர், அமைதியான சூழல். இந்த தருணத்தில் மூழ்கியிருக்கிறேன்’ என்று தன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் யூசுப் பதான் பதிவிட்டார்.

முர்ஷிதாபாத் மாவட்டம் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில், அப்பகுதியைச் சேர்ந்த எம்.பி.யான யூசுப் பதான் நேரில் வந்து மக்களைச் சந்திக்காமல் இருப்பதை முன்வைத்து அவரை எதிர்க்கட்சியான பாஜக கடுமையாக விமர்சித்தது. முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் யூசுஃப் பதானின் செயலை விமர்சித்தனர்.

அதேநேரம், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்குள் யூசுப் பதானுக்கு ஆதரவும் கிளம்பியுள்ளது. முர்ஷிதாபாத் மாவட்டத்தில் முர்ஷிதாபாத், பர்ஹாம்பூர், ஜாங்கிபூர் என மூன்று மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த மூன்று தொகுதிகளுமே திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் வசம் உள்ளது.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட சம்சேர்கஞ்ச், துலியான், சுடி ஆகிய பகுதிகள் ஜாங்கிபூர் மக்களவைத் தொகுதிக்குள் வருவதாகவும், அவை யூசுப் பதான் தொகுதியான பர்ஹாம்பூருக்குள் இல்லை என்பதால் தனக்கு சம்மந்தம் இல்லாத பகுதிக்கு அவர் செல்லத்தேவையில்லை என்றும் முர்ஷிதாபாத் மாவட்ட திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் அபூர்வா சர்க்கார் கருத்து தெரிவித்துள்ளார்.

குஜராத்தைச் சேர்ந்த யூசுப் பதான், மேற்கு வங்க மாநிலத்தின் பர்ஹாம்பூர் மக்களவைத் தொகுதியில் கடந்த தேர்தலில் (2024) நின்று, அங்கே 1999 முதல் தொடர்ச்சியாக எம்.பி.யாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சௌத்ரியைத் தோற்கடித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in