
ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாகச் சாதித்துக் காட்டியுள்ள இந்தியா, பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய இடங்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நேபாளி உள்பட 26 பேர் உயிரிழந்தார்கள். இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி தரும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களைக் குறிவைத்து நேற்று நள்ளிரவு இந்தியா தாக்குதல் நடத்தியது.
இதில் 9 பயங்கரவாத முகாம்கள் வெற்றிகரமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக இந்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயர் சூட்டப்பட்டு, பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாத வகையில், தாக்குதல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் 4 முகாம்களும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 முகாம்களும் அழிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப்பட்ட முகாம்களின் தொலைவு
சர்ஜால் முகாம், சியால்கோட்
பாகிஸ்தானில் முதலில் சியால்கோடில் உள்ள சர்ஜால் முகாமில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இது பாகிஸ்தான் உள்ளே 6 கி.மீ. தொலைவில் உள்ளது. மார்ச் 2025-ல் ஜம்மு-காஷ்மீர் காவல் துறையினர் நால்வர் நால்வர் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய பயங்கரவாதிகள் பயிற்சி பெற்ற முகாம் இது.
ஜோயா முகாம், சியால்கோட்
இந்த முகாம் பாகிஸ்தான் உள்ளே 12 முதல் 18 வரை உள்ளது. ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் மிகப் பெரிய முகாம்களில் இதுவும் ஒன்று. கத்துவா, ஜம்மு பிராந்தியத்தில் பயங்கரவாதத்தைப் பரப்புவதற்கான கட்டுப்பாட்டு மையங்களில் ஒன்று இது. பதன்கோட் விமானப் படைத் தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்த முகாமிலிருந்து தான் திட்டமிடப்பட்டது.
மர்காஸ் தைபா
இது பாகிஸ்தான் உள்ளே 18-25 கி.மீ.-ல் உள்ளது. அஜ்மல் கசாப் மற்றும் டேவிட் ஹெட்லே உள்பட 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இந்த முகாமில் தான் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.
மர்காஸ் ஷுபானல்லா, பஹவால்பூர்
ஜெய்ஷ்-ஏ-முஹமது பயங்கரவாத அமைப்பின் தலைமையகம் இது. பாகிஸ்தான் உள்ளே 100 கி.மீ. தொலைவில் இந்த முகாம் அமைந்துள்ளது.