
பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து பாகிஸ்தானுக்குள் நடைபெற்ற தாக்குதல்கள் துல்லியமானதாக மட்டுமல்லாமல், பெரும் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளன. ஸ்கால்ப் க்ரூஸ் ஏவுகணை மற்றும் ஹேமர் வெடிகுண்டுகளை ரஃபேல் போர் விமானங்களின் மூலம் ஏவி இந்த தாக்குதலை வெற்றிகரமாக இந்திய பாதுகாப்புப் படைகள் நடத்தியுள்ளன.
கடந்த 2019 பாலகோட் தாக்குதலின்போது மிராஜ் 2000 ரக போர் விமானங்களை இந்தியா ஈடுபடுத்தியது. தற்போது, ஆபரேஷன் சிந்தூரில் ரஃபேல் விமானங்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.
ஸ்கால்ப் ஏவுகணை
ஸ்கால்ப் ஏவுகணைகள் `ஸ்டார்ம் ஷேடோ’ என்றும் அழைக்கப்படுகின்றன. தொலைதூர வான்வழித் தாக்குதல்களில் உபயோகப்படுத்தப்படும் இந்த ஏவுகணைகளால் 450 கி.மீ. வரை சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்க முடியும். இதற்காகவே ஜிபிஎஸ் தொழில்நுட்பம் இதில் உபயோகிக்கப்படுகிறது.
இரவிலும், அனைத்து விதமான தட்பவெப்ப சூழல்களிலும் இயங்கும் திறன் கொண்டதால் உலகெங்கிலும் உள்ள பாதுகாப்புப் படைகளின் விருப்பத்திற்குரிய ஏவுகணையாக இது உள்ளது. கடினமான பாதுகாப்பு அமைப்பைக்கொண்ட பதுங்குக் குழிகள் மற்றும் வெடிமருந்துக் கிடங்குகளை தாக்கி அழிக்க சிறந்த ஆயுதமாக இது கருதப்படுகிறது.
ஐரோப்பாவைச் சேர்ந்த எம்.பி.டி.ஏ. அமைப்பால் தயாரிக்கப்படும் இந்த ஏவுகணையை, கடந்தாண்டு ரஷ்யா மீதான தாக்குதலில் உக்ரைன் பயன்படுத்தியது.
ஹேமர் வெடிகுண்டு
பலம்வாய்ந்த கட்டமைப்புகளை தாக்கி அழிக்கும் வல்லமை இந்த வெடிகுண்டுகளால், 70 கி.மீ. தூரம் வரை பயணித்து இலக்குகளைத் துல்லியமாக தாக்க முடியும்.
பிரெஞ்சு நிறுவனமான சஃப்ரன் தயாரித்த இந்த வெடிகுண்டுகளை ஜாமர்கள் மூலம் தடுத்து நிறுத்த முடியாது. கரடுமுரடான நிலப்பரப்புகளில் குறைந்த உயரத்தில் இருந்தபடி ஏவப்படும் இந்த வெடிகுண்டுகளை இடைமறிப்பது கடினமாகும்.
இத்தகைய ஆயுதங்களை உபயோகித்தே பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.