
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா மேற்கொண்ட பதிலடியான `ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து ஊடகங்களுக்கு விளக்க இன்று (மே 7) காலை 10.30 மணி அளவில் மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தனது இருக்கையில் அமர்ந்தபோது, அவருடன் இரண்டு அறிமுகமில்லாத பெண் பாதுகாப்புப் படை அதிகாரிகள் இருந்தனர்.
இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் இந்திய ராணுவத்தின் கர்னல் சோபியா குரேஷி ஆகியோர்தான் அந்த இரு பெண் அதிகாரிகள். பாகிஸ்தானில் செயல்பட்ட பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய பாதுகாப்பு படைகள் மேற்கொண்ட நடவடிக்கையை இருவரும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மாறிமாறி விவரித்தனர்.
தற்செயலாக, 'ஆபரேஷன் சிந்தூர்' நடந்த அதே 25 நிமிட நேரமே, இந்த செய்தியாளர்கள் சந்திப்பும் நீடித்தது
கர்னல் சோபியா குரேஷி
1981-ல் பிறந்த கர்னல் சோபியா குரேஷி, குஜராத்தைச் சேர்ந்தவர். இவரது தாத்தாவும், தந்தையும் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்கள். ராணுவப் பயிற்சியை நிறைவுசெய்து, 1999-ல் பணியில் இணைந்த சோபியா, பல்வேறு முக்கிய பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியுள்ளார்.
2006-ல் காங்கோவில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணியில் இராணுவப் பார்வையாளராக பணியாற்றி சர்வதேச அளவில் அனுபவம் பெற்றார். கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக உள்நாட்டில் எடுக்கப்பட்ட பல்வேறு முக்கிய நடவடிக்கையில் பங்களித்துள்ளார்.
கடந்த 2018-ல் இந்தியா உள்பட 18 நாடுகள் பங்கேற்ற ராணுவப் பயிற்சி நிகழ்வில், ஒரே பெண் கமாண்டராகப் பங்கேற்று சாதனை படைத்தார். இதற்காக மறைந்த முன்னாள் ராணுவத் தளபதி பிபன் ராவத்திடம் இவர் பாராட்டைப் பெற்றார்.
இவரது கணவர் தாஜுதீன் குரேஷியும் ராணுவ அதிகாரியாவார். இந்த தம்பதிகளுக்கு சமீர் என்ற மகன் உள்ளார்.
விங் கமாண்டர், வியோமிகா சிங்
வியோமிகா என்றால் `வானத்தின் மகள்’ என்று அர்த்தம். பொறியியல் பட்டம் பெற்றுள்ள வியோம்கா, கல்லூரிக் காலத்தில் என்.சி.சி.யில் தீவிரமாக செயல்பட்டுள்ளார். முதல் தலைமுறை பாதுகாப்புப் படை அதிகாரியான வியோமிகா 2004-ல் விமானப்படை பணியில் இணைந்தார்.
தற்போது ஹெலிகாப்டர் பைலட்டாக உள்ள வியோமியா, சேத்தக், சீட்டா போன்ற முக்கிய ஹெலிகாப்டர்களை இயக்கும் அனுபவம் பெற்றுள்ளார்.
ஒட்டுமொத்த 2,500 மணிநேரங்கள் பறந்த அனுபவமுடைய வியோம்கா, ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு என இந்தியாவின் சவாலான நிலப்பரப்புகளில் ஹெலிகாப்டர்களை இயக்கியுள்ளார். 2021-ல் 21,650 அடி உயரமுள்ள மணிராங் மலையில் முப்படையைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே ஈடுபட்ட மலையேற்றப் பயணத்தில் இவரும் பங்கேற்றார்.