
ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் அமைந்துள்ள சர்வதேச எல்லைப்பகுதி வழியாக நேற்று (மே 8) இரவு இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 7 தீவிரவாதிகளை இந்திய பாதுகாப்புப் படைகள் சுட்டுக்கொன்றுள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்றிரவு 11 மணியளவில் சம்பாவில் அமைந்துள்ள சர்வதேச எல்லைக்குப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தை எல்லைப் பாதுகாப்புப் படைகள் (பி.எஸ்.எஃப்.) வீரர்கள் கண்டறிந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, உடனடியாக ராணுவ நடவடிக்கை தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக எல்லைப் பாதுகாப்பு படையின் (ஜம்மு பிரிவு) எக்ஸ் பதிவில்,
`மே 8, 2025 அன்று இரவு சுமார் 11 மணி அளவில், ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் மேற்கொள்ளப்படவிருந்த ஒரு ஊடுருவல் முயற்சியை பி.எஸ்.எஃப். முறியடித்தது’ என்று கூறப்பட்டுள்ளது.
எல்லைப் பகுதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட இந்த 7 தீவிரவாதிகளுக்கும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்த அமைப்பின் மேற்பார்வையின்கீழ் பஹல்காம் தாக்குதலை, `தி ரெசிஸ்டென்ட் ஃப்ரண்ட்' அமைப்பு நடத்தியது.
இரு நாடுகளுக்கும் இடையேயான சர்வதேச எல்லைப்பகுதிக்கு அருகே அமைந்துள்ள ஜம்மு, பதான்கோட், உதம்பூர் பகுதிகளைக் குறிவைத்து நேற்று (மே 8) இரவு முதல், பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் மேற்கொண்ட அனைத்துவிதமான தாக்குதல்களையும், இந்திய பாதுகாப்புப் படைகள் முறியடித்துள்ளன.