
ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, வடக்கு மற்றும் மேற்கிந்தியப் பகுதிகளிலுள்ள 18 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நேபாளி உள்பட 26 பேர் உயிரிழந்தார்கள். இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி தரும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களைக் குறிவைத்து நேற்று நள்ளிரவு இந்தியா தாக்குதல் நடத்தியது.
இதில் 9 பயங்கரவாத முகாம்கள் வெற்றிகரமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக இந்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயர் சூட்டப்பட்டு, பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாத வகையில், தாக்குதல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக வடஇந்தியாவில் பல்வேறு விமான நிலையங்களில் விமான சேவைகள் முடங்கியுள்ளன.
லே, ஸ்ரீநகர், சண்டிகர், அம்ரித்சர், ஜோத்பூர், ஜெய்சால்மர், தரம்சாலா, ஷிம்லா, ராஜ்கோட், போர்பந்தர் உள்ளிட்ட 18 விமான நிலையங்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளன. 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இண்டிகோ நிறுவனம் மட்டும் 165-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளது.
இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் இண்டிகோ, ஏர் இந்தியா போன்ற விமானச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் பல்வேறு அறிவுரைகளைப் பயணிகளுக்கு வழங்கி வருகின்றன.