
அப்பாவி மக்களைக் கொன்றவர்களை மட்டுமே நாம் கொன்றுள்ளோம் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நேபாளி ஒருவர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டார்கள். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் உருவாகத் தொடங்கியது.
நேற்றிரவு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியப் படைகள் தாக்கி அழித்தன. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தியப் படைகளைப் பாராட்டியுள்ளார்.
"இந்தியப் படைகள் தனது வீரம் மற்றும் துணிச்சலை வெளிப்படுத்தி நேற்றிரவு வரலாறு படைத்தது அனைவரும் அறிந்தது. இந்தியப் படைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் துல்லியமாகச் செயல்பட்டுள்ளன. முன்கூட்டியே திட்டமிட்டபடி இலக்குகள் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டன.
நமது நடவடிக்கை மிகுந்த சிந்தனைக்குப் பிறகு சரியான அளவில் எடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் மனஉறுதியை உடைக்கும் நோக்கில் அவர்களுடைய முகாம்கள் மற்றும் இதர உள்கட்டமைப்புகள் மட்டுமே குறிவைத்து தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.
மீண்டும் ஒருமுறை பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நம் படைகள் பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மற்றும் அவர்களுடைய உள்கட்டமைப்புகளில் பதிலடி தந்துள்ளன. அப்பாவி மக்களைக் கொன்றவர்களை மட்டுமே நாம் கொன்றுள்ளோம்" என்றார் ராஜ்நாத் சிங்.