
உச்ச நீதிமன்றத்துக்கு அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 142 வழங்கும் சிறப்பு அதிகாரம், ஜனநாயகச் சக்திகளுக்கு எதிரான அணு ஆயுதத் தாக்குதலாக மாறியுள்ளதாக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
மாநில சட்டப்பேரவைகளால் நிறைவேற்றப்பட்டு ஆளுநரால் பரிந்துரைக்கப்பட்ட மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் முடிவெடுக்க 3 மாதங்கள் காலக்கெடு நிர்ணயித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பைப் பிறப்பித்துள்ளது.
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்த தனது கருத்தை முன்வைத்துள்ளார்.
"சட்டம் இயற்றும், நிர்வாகச் செயல்பாடுகளைச் செய்யும் நீதிபதிகள் நம்மிடம் உள்ளார்கள். அவர்கள் சூப்பர் நாடாளுமன்றமாகச் செயல்படுவார்கள். அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இருக்காது, காரணம் சட்டம் எதுவும் அவர்களுக்குப் பொருந்தாது.
அண்மையில் வெளியான தீர்ப்பு குடியரசுத் தலைவருக்கு உத்தரவைப் பிறப்பிக்கிறது. நாம் எதை நோக்கி பயணிக்கிறோம்? நாட்டில் என்ன நடக்கிறது? இது மாதிரியான ஒரு தருணத்தை நான் பார்க்க நேரிடும் என நினைத்துக் கூட பார்த்ததில்லை. அரசியலமைப்பைப் பாதுகாப்பேன் என குடியரசுத் தலைவர் உறுதிமொழி எடுப்பார். குடியரசுத் தலைவர் மற்றும் அவர் நியமிக்கும் ஆளுநர்கள் மட்டுமே இந்த உறுதிமொழியை எடுப்பார்கள்.
குடியரசுத் தலைவருக்கு உத்தரவிடக்கோரிய சூழல் இருக்கக் கூடாது. எதன் அடிப்படையில் இந்த உத்தரவைப் பிறப்பிக்க முடியும். அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 142 உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கும் சிறப்பு அதிகாரம், ஜனநாயகச் சக்திகளுக்கு எதிரான அணு ஆயுதத் தாக்குதலாக மாறியுள்ளன" என்றார் தன்கர்.