நான் இரும்பு மனிதன், எதற்கும் அஞ்சமாட்டேன்: சிறையிலிருந்து கெஜ்ரிவால் அறிக்கை

என்னைக் கைது செய்திருப்பதால், நீங்கள் பாஜகவினரை வெறுக்காதீர்கள். அவர்களும் நமது சகோதரர்கள்தான்...
நான் இரும்பு மனிதன், எதற்கும் அஞ்சமாட்டேன்: சிறையிலிருந்து கெஜ்ரிவால் அறிக்கை
ANI

நான் இரும்பு மனிதன். எதற்கும் அஞ்சமாட்டேன் என்று தில்லி முதல்வரும் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த வியாழக்கிழமை கைது செய்தது. இதையடுத்து வெள்ளிக்கிழமை அவர் தில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து, மார்ச் 28 வரை அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கெஜ்ரிவால் எழுதிய கடிதத்தை தான் வாசிப்பதாக கூறி வாசித்துக் காட்டியுள்ளார். அதில், கெஜ்ரிவால் கூறியுள்ளதாவது:

“நான் இரும்பு மனிதன். எதற்கும் அஞ்சமாட்டேன். நான் சிறைக்குள் இருந்தாலும் வெளியில் இருந்தாலும் நாட்டுக்காகவே சேவை செய்வேன். நான் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளேன்.  எனவே இந்தக் கைது என்னை வியப்பில் ஆழ்த்தவில்லை.

இந்தியாவை உலகின் முதன்மையான நாடாக மாற்ற நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்தியாவிற்கு உள்ளேயும், வெளியிலும் உள்ள சில சக்திகள் நமது நாட்டை பலவீனப்படுத்த முயல்கின்றன. இவற்றைக் கண்டறிந்து வீழ்த்த  வேண்டும்.

தில்லியில் உள்ள தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு மாதம்தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டத்தை எனது அரசு தொடங்கியது. நான் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதால், தங்களுக்கு ரூ. 1,000 கிடைக்குமா என அவர்கள் சந்தேகம் கொள்ளக்கூடும். என் மீது நம்பிக்கை வைக்குமாறு நான் அவர்களை கேட்டுக்கொள்கிறேன். நான் விரைவில் வெளியே வருவேன்.

நான் எப்போதாவது வாக்குறுதி அளித்து அதை நிறைவேற்றாமல் இருந்திருக்கிறேனா? உங்களின் மகனாகவும், சகோதரனாகவும் இருக்கும் நான் இரும்பினால் செய்யப்பட்டவன். நான் மிகவும் வலிமையானவன். உங்களிடம் முன்வைக்க எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள் இருக்கிறது. கோயிலுக்குச் சென்று எனக்காக கடவுளிடம் பிரார்த்தியுங்கள்.

இந்த நேரத்தில், ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள். என்னைக் கைது செய்திருப்பதால், நீங்கள் பாஜகவினரை வெறுக்காதீர்கள். அவர்களும் நமது சகோதரர்கள்தான்.” என்று அந்த அறிக்கையில் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in