பஞ்சாப் மாநிலத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அறிவித்துள்ளது. கூட்டணிக் கட்சியாக இருந்த சிரோமணி அகாலி தளம் தனித்துப் போட்டியிடலாம் என செய்திகள் வெளிவந்த நிலையில் பாஜக இதனை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பஞ்சாப் மாநில பாஜக தலைவர் சுநீல் ஜாக்கர், எக்ஸ் தளம் மூலம் வெளியிட்டுள்ள விடியோவில் மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்துக் களம் காண இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர்கள், தொண்டர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பஞ்சாபில் உள்ள அனைவருக்கும் பயனளிக்கும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு போல யாரும் பஞ்சாபுக்காக உழைக்கவில்லை என்றும் ஜாக்கர் கூறியுள்ளார்.
பஞ்சாபில் மொத்தம் 13 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவும் சிரோமணி அகாலி தளமும் இணைந்து போட்டியிட்டது. இரு கட்சிகளும் தலா இரண்டு இடத்தில் வென்றது. காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் வெற்றிபெற்றது. ஆம் ஆத்மி கட்சி ஒரு இடத்தில் வென்றது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை அடுத்து கடந்த 2020 செப்டம்பரில் அகாலி தளம் தேசிய முன்னணியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தது. இந்தப் போராட்டத்தில் பஞ்சாப், ஹரியாணா மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் அதிக அளவில் பங்கேற்றனர். எனினும்விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை 2021 நவம்பரில் மத்திய அரசு விலக்கிக் கொண்டது.