முதல்வர் சித்தராமையாவை விசாரிக்க தடை இல்லை: கர்நாடக உயர் நீதிமன்றம்
ANI

முதல்வர் சித்தராமையாவை விசாரிக்க தடை இல்லை: கர்நாடக உயர் நீதிமன்றம்

சித்தராமையா மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 17 மற்றும் பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சட்டப்பிரிவு 218-ன் கீழ் வழக்கு தொடர ஆளுநர் தவார் சந்த் கெலாட் அனுமதி அளித்தார்
Published on

முடா வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை விசாரிக்க தடை இல்லை என இன்று (செப்.24) காலை தீர்ப்பளித்துள்ளது கர்நாடக உயர் நீதிமன்றம்.

மைசூருவில், அரசாங்க வளர்ச்சிப் பணிகளால் நிலங்களை இழந்த பொதுமக்களுக்கு மைசூரூ நகர வளர்ச்சி அமைப்பு (முடா) வேறு இடங்களில் நிலங்களை ஒதுக்குகிறது. அரசாங்க வளர்ச்சிப் பணிகளால் நிலத்தை இழந்த கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, அதற்குப் பதிலாக முடா அமைப்பால் அதிக மதிப்பிலான பிளாட்கள் ஒதுக்கப்பட்டன என்று குற்றச்சாட்டு எழுப்பினார் சமூக ஆர்வலர் சினேஹமாயி கிருஷ்ணா.

இது தொடர்பாக கர்நாடக ஆளுநர் தவார் சந்த் கெலாட்டை சந்தித்து முதல்வர் சித்தராமையா மீது சமூக ஆர்வலர்கள் சினேஹமாயி கிருஷ்ணாவும், ஆபிரஹாமும் புகார் மனுக்களை அளித்தனர்.

இதைத் தொடர்ந்து முதல்வர் சித்தராமையா மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 17 மற்றும் பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சட்டப் பிரிவு 218, ஆகியவற்றின் கீழ் வழக்கு தொடர ஆளுநர் தவார் சந்த் கெலாட் அனுமதி அளித்தார். ஆளுநரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முதல்வர் சித்தராமையா கடந்த ஆகஸ்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதி நாக பிரசன்னா, முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடரவும், விசாரிக்கவும் கர்நாடக ஆளுநர் அனுமதி அளித்தது செல்லும் எனவும், சித்தராமையா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் உத்தரவிட்டார்.

logo
Kizhakku News
kizhakkunews.in