
குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்க முடியாது என குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்த கருத்துக்கு எதிர்வினை ஆற்றியுள்ள மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இதுவரை எந்த ஒரு மாநிலங்களவைத் தலைவரும் இதுபோல அரசியல் கருத்துக்களைத் தெரிவித்தது இல்லை என்று கூறியுள்ளார்.
சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிலுவையில் வைத்த ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களுக்கு காலக்கெடு விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இது தொடர்பாக, நேற்று (ஏப்.17) நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், `நம்மிடம் சட்டம் இயற்றும் நீதிபதிகள் உள்ளனர். அவர்கள் நிர்வாகப் பணிகளையும் செய்து, சூப்பர் நாடாளுமன்றமாக செயல்படுவார்கள். நாட்டின் சட்டதிட்டங்கள் அவர்களுக்குப் பொருந்தாத நிலை உள்ளது. இது கண்டிக்கத்தக்கது’ என்றார்.
இந்நிலையில், தில்லியில் இன்று (ஏப்.18) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கபில் சிபல் கூறியதாவது,
`இதுவரை எந்த ஒரு மாநிலங்களவைத் தலைவரும் (குடியரசுத் துணைத் தலைவர்) இதுபோல அரசியல் கருத்துக்களைத் தெரிவித்தது இல்லை. பாஜகவைச் சேர்ந்தவர்களும் இவ்வாறு நடந்துகொண்டது இல்லை. அரசு நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றங்களின் முடிவுகளுக்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள் என்பது உண்மையிலேயே கவலைக்குரியது.
தீர்ப்பு ஏற்கும் வகையில் இருக்கும்போது உச்ச நீதிமன்றத்தைப் போற்றுகிறார்கள். ஆனால் ஒரு தீர்ப்பு அவர்களின் கருத்துகளுடன் ஒத்துப்போகாத தருணத்தில், குற்றம் சுமத்துகிறார்கள். அரசியலமைப்புப் பதவியில் இருக்கும் ஒருவர் இவ்வாறு கூறுவது சரியல்ல.
அவர் மீது எனக்கு நிறைய மரியாதை உள்ளது. ஆனால் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142-ஐ 'அணு ஏவுகணை' என்று எப்படிக் கூற முடியும்? சட்டப்பிரிவு 142 உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்கியுள்ளது. அந்த அதிகாரம் அரசியலமைப்புச் சட்டத்தால் வழங்கப்படுகிறது.
முழுமையான நீதியை நிலைநாட்டச் செய்வது அரசாங்கம் அல்ல, அரசியலமைப்புச் சட்டமாகும்’ என்றார்.