
மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு மறு சீரமைக்கப்பட்டது. இந்த மறு சீரமைப்பில் பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களுக்கு நிதி ஆயோக்கில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
நிதி ஆயோக்கின் சிறப்பு அழைப்பாளர்களாக பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஜெ.பி. நட்டா, வீரேந்திர குமார், ஜுவல் ஒரம், அன்னபூர்ணா தேவி ஆகியோருடன், பாஜக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களான ஹெச்.டி. குமாரசாமி (மஜத), ராஜீவ் ரஞ்சன் சிங் (ஐஜத), ஜிதன் ராம் மஞ்சி (ஹிஅமோ), ராம்மோகன் நாயுடு (தெலுங்கு தேசம்), சிராக் பஸ்வான் (லோக் ஜனசக்தி) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று நிதி ஆயோக் அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி நிதி ஆயோக்கின் தலைவராகவும், பொருளாதார நிபுணர் சுமன் கே. பெரி நிதி ஆயோக்கின் துணைத் தலைவராகவும், விஞ்ஞானி வி.கே.சரஸ்வத், வேளாண் பொருளாதார நிபுணர் ரமேஷ் சந்த், பருவினப் பொருளாதார நிபுணர் அரவிந்த் விர்மானி, குழந்தைகள் நல மருத்துவர் வி.கே. பால் ஆகியோர் நிதி ஆயோக்கின் முழு நேர உறுப்பினர்களாகவும், தங்களது பதவிகளில் தொடருகின்றனர்.
நிதி ஆயோக்கின் அலுவல் சாரா உறுப்பினர்களாக மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, சிவராஜ் சிங் சௌஹான், நிர்மலா சீதாராமன் ஆகியோர் இருப்பார்கள் என்றும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015-ல் 65 வருடப் பழமையான மத்திய திட்ட கமிஷனைக் கலைத்துவிட்டு, அதற்கு மாற்றாக நிதி ஆயோக் அமைப்பை நிறுவியது அன்றைய மத்திய அரசு.