
தேர்தல் தொடர்பான அனைத்துவிதமான சேவைகளுக்கும் `இசிஐநெட்’ என்ற ஒருங்கிணைந்த புதிய இணையதளம் இந்திய தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
தேர்தல் தொடர்பான சேவைகளை தற்போது வழங்கிவரும் சிவிஜில், சக்ஷம், இஎஸ்எம்எஸ் போன்ற சுமார் 40 இணையதளங்கள் மற்றும் செயலிகள் வழியாக மேற்கொள்ளப்படும் அனைத்துவிதமான பணிகளையும், ஒருங்கிணைந்த ஒரே இணையதளமான `இசிஐநெட்’ வழியாக வருங்காலத்தில் மேற்கொள்ளலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசிஐநெட்டின் வடிவமைப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இலகுவான செயல்பாடு, வலுவான இணையப் பாதுகாப்பு அம்சங்கள், எளிதான பயன்பாடு போன்றவற்றை உறுதி செய்வதற்காகக் கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தேர்தல் ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கபடுகிறது.
நாடு முழுவதும் உள்ள சுமார் 100 கோடி வாக்காளர்கள், 10.5 லட்சம் எண்ணிக்கையிலான பூத் அலுவலர்கள், அரசியல் கட்சிகளால் நியமிக்கப்படும் சுமார் 15 லட்சம் பூத் ஏஜெண்டுகள், ஏறத்தாழ 45 லட்சம் வாக்குச்சாவடி அதிகாரிகள், 15,597 உதவி தேர்தல் பதிவு அலுவலர்கள், 4,123 தேர்தல் பதவி அலுவலர்கள், 767 மாவட்ட தேர்தல் அலுவலர்கள் என அனைவருக்கும் இசிஐநெட் பலனளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
36 தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட, வட்டார அளவிலான தேர்தல் அலுவலர்களுடன் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகே இந்த புதிய இணையதளத்தின் உருவாக்கம் தொடங்கப்பட்டதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.