
நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால், 3 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுக்க பல்வேறு தேர்வு முகாம்களில் நடைபெறுகிறது. 500 நகரங்களில் 5,453 தேர்வு மையங்களில் 22.7 லட்சம் பேர் தேர்வெழுதுகிறார்கள்.
நீட் தேர்வில் முறைகேடு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, பெரும்பாலானத் தேர்வு மையங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் நடைபெறுகின்றன.
இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு தகவலறிந்த நெருங்கிய வட்டாரங்கள் கூறியதாவது:
"இந்த ஆண்டு பெரும்பாலான தேர்வு மையங்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு நாளன்று மாவட்டம், மாநிலம் மற்றும் மத்திய அளவில் என மூன்று நிலைகளில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேர்வுக்கு முன்பு, தேர்வு நேரத்தில் அல்லது தேர்வுக்குப் பிறகு முறைகேட்டில் ஈடுபட்டால், தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வுகளில் பங்கேற்க 3 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்படும். மேலும் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்" என்று கூறப்பட்டது.
இதனிடையே இளநிலை மருத்துவப் படிப்புக்கான 2024-ம் ஆண்டு தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விதிமீறல்களில் ஈடுபட்டதாக 26 மருத்துவப் படிப்பு மாணவர்களை உடனடியாக நீக்க மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. கூடுதலாக 2024-25 கல்வியாண்டில் 14 மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முறைகேட்டில் ஈடுபட்டவர்களைக் கண்டறிவதற்கான குழு நடத்திய ஆய்வின் முடிவில் 42 பேர் 2024, 2025, 2026 ஆகிய ஆண்டுகளில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 9 பேருக்கு 2025 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில் தேர்வு எழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளது.