
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு வினாத் தாள் கசிவு தொடர்பாக பாட்னா எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் 2021, 2022-ம் ஆண்டில் மருத்துவப் படிப்பைத் தொடங்கியுள்ளார்கள். இவர்களுடைய அறைகளில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், எல்க்ட்ரானிக் சாதனங்களைப் பறிமுதல் செய்துள்ளார்கள். கைது நடவடிக்கை குறித்து சிபிஐ தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
நீட் வினாத் தாள் கசிவு வழக்கில் சிபிஐ இதுவரை மொத்தம் 14 பேரைக் கைது செய்துள்ளது. இதில் வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ராகேஷ் ரஞ்சன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்தான் நீட் தேர்வு எழுத முனையும் மாணவர்களிடத்தில் வினாத் தாளைக் கசியவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். நீட் முறைகேட்டில் மிகப் பெரிய அளவில் சதித் திட்டம் நடந்துள்ளதாக சிபிஐ தரப்பில் முன்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள் மற்றும் தேர்வு மையங்கள் வாரியாக நாளை மாலை 5 மணிக்குள் வெளியிட வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.