ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைமைச் செயலாளராக நீரப் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
1987 ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்த நீரப் குமார் பிரசாத், தற்போது சுற்றுச்சூழல், வனம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஆந்திரப் பிரதேசத்தின் சிறப்பு தலைமைச் செயலராக உள்ளார். தற்போது பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள இவர், ஆந்திரப் பிரதேசத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே ஆந்திரத்தின் தலைமைச் செயலாளராக இருந்த ஜவஹர் ரெட்டி தற்போது விடுப்பில் உள்ளார். இவருக்குப் பதில் நீரப் குமார் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜவஹர் ரெட்டிக்கு இதுவரை எந்தப் பொறுப்பும் ஒதுக்கப்படவில்லை.
சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் 175 இடங்களில் 135 இடங்களில் தெலுங்கு தேசம் வெற்றி பெற்றது. இந்தக் கூட்டணியில் அங்கம் வகித்த ஜன சேனா 21 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியிலிருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 11 இடங்களில் வெற்றி பெற்றது.
சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டி கடந்த செவ்வாய்க்கிழமை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். எனினும், புதிய ஆட்சி அமையும் வரை காபந்து முதல்வராகச் செயல்படுமாறு ஜெகன்மோகன் ரெட்டியை ஆளுநர் கேட்டுக்கொண்டார்.