நடிகை கங்கனா ரனாவத் பற்றி அவதூறு பரப்பிய விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் பிரமுகர் சுப்ரியா ஸ்ரீநாத் மீது தேசிய மகளிர் ஆணையம், புகார் கொடுத்துள்ளது. இது தொடர்பாக அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் கங்கனா ரனாவத், ஹிமாச்சலம் மாநிலம் மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் சமூகவலைத்தளங்களைக் கவனித்து வரும் சுப்ரியா ஸ்ரீநாத், தனது இஸ்டகிராம் பக்கத்தில் அவதூறு பரப்பியதாகச் சொல்லப்படுகிறது.
“கங்கனா ரனாவத், ஹிமாச்சல மாநிலம் மண்டி தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு அவரது மார்க்கெட் விலை என்ன தெரியுமா? என்று கேட்டு, கங்கனாவின் படத்தையும் சுப்ரியா பதிவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “காங்கிரஸ் பிரமுகர் சுப்ரியாவின் நடத்தையை ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்களின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் அவர் செயல்பட்டுள்ளார். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே சுப்ரியா ஸ்ரீநாத் எக்ஸ் தளத்தில் அளித்துள்ள விளக்கத்தில், “நான் பெண்களுக்கு எதிரான கருத்து கூறும் பெண்மணி அல்ல. கங்கனா பற்றிய விமர்சனத்தை அழித்துவிட்டேன். என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாரோ ஊடுருவி அந்தப் பதிவை வெளியிட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.
இந்தச் சர்ச்சை விவகாரம் குறித்து கங்கனா ரனாவத் கூறியதாவது: இந்த விவகாரம் பற்றி பேசுவதற்காக பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா என்னை தில்லிக்கு அழைத்துள்ளார். அவரைச் சந்தித்துப் பேசிய பின்னர்தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி நான் கூறமுடியும் என்று தெரிவித்துள்ளார்.