
முகலாய அரசர்கள் குறித்த பாடங்களை 7-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாட புத்தகத்தில் இருந்து என்சிஇஆர்டி நீக்கியுள்ளது.
அண்மையில் என்சிஇஆர்டி மேற்கொண்ட திருத்தத்தின்படி 7-ம் வகுப்பு சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில் இருந்து முகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்கள் தொடர்பான அனைத்து குறிப்புகளும் நீக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய பின்னணியை பிரதிபலிக்கும் அரச வம்சங்கள், மஹா கும்பமேளா மற்றும் முக்கிய மத்திய அரசின் திட்டங்கள் குறித்த அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
புதிய தேசிய கல்விக் கொள்கை மற்றும் பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட வரைவுக் கொள்கை ஆகியவற்றுடன் ஒத்துப்போகும் வகையில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்திய மரபுகள், தத்துவங்கள் மற்றும் உள்நாட்டு சூழல்கள் போன்றவற்றை பள்ளிக் கல்வியில் இணைப்பதற்கு இந்த கொள்கைகள் வலியுறுத்துகின்றன.
துக்ளக், கில்ஜி, மம்லூக் மற்றும் லோடி வம்சங்கள் குறித்த விரிவான தகவல்களும், முகலாய பேரரசர்களின் சாதனைகள் குறித்த இரண்டு பக்க அட்டவணையும் பாட புத்தகத்தில் இருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அத்தியாயத்தில், மகத, மௌரிய, சுங்க மற்றும் சாத்தவாஹன வம்சங்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள இஸ்லாமிய, கிறிஸ்தவ, யூத, பார்சி, ஹிந்து, பௌத்த மற்றும் சீக்கிய மதங்களுக்கான புனித யாத்திரைத் தலங்கள் குறித்த புதிய அத்தியாயம் சேர்க்கப்பட்டுள்ளது. நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தியாவை புனித யாத்திரைகளின் பூமி என்று குறிப்பிட்ட ஒரு வாக்கியம் இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக, மகா கும்பமேளாவைப் பற்றிய ஒரு குறிப்பில், அதில் 660 மில்லியன் மக்கள் எவ்வாறு பங்கேற்றனர் என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியைப் பறக்கவிட அனுமதிக்கப்படாத ஒரு காலம் இருந்தது என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்த புதிய அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.