
கடந்த 14 வருடங்களில் இந்தியாவில் நக்ஸல் வன்முறை சம்பவங்கள் 81 சதவீதம் வரை குறைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களவையில் இன்று (மார்ச் 26) தகவல் தெரிவித்துள்ளது.
மார்ச் 2026-ல் இந்தியாவில் இருந்து நக்ஸலிசம் முற்றிலுமாக துடைத்தெறியப்படும் என்று இலக்கு வைத்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
இது தொடர்பாக கடந்த வாரம் மாநிலங்களவையில் அவர் பேசுகையில், `இடதுசாரி தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர, பாதுகாப்பு நடவடிக்கைகள், வளர்ச்சிப் பணிகள், உளவுத்துறையின் செயல்பாடுகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து செயல்படுத்துகிறோம்’ என்றார்.
இந்நிலையில், நக்ஸலிசம் தொடர்பாக மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் இன்று (மார்ச் 26) கூறியதாவது,
`பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் என நக்ஸலிசத்தால் 2010-ல் 1,005 பேர் மரணமடைந்துள்ளனர். 2024-ல் இது 85 சதவீதம் குறைந்து, 150 மரணங்கள் ஆக பதிவாகியுள்ளது. இடதுசாரி தீவிரவாதத்தால் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் 2019-ல் 501 ஆக இருந்தன. 2024-ல் இது 25 சதவீதம் குறைந்து, 374 ஆக பதிவாகியுள்ளது.
அத்துடன் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஜார்க்கண்ட், பீஹார், ஒடிஷா, மஹாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் 2019-ஐ ஒப்பிடும்போது 2024-ல் வன்முறை சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன’ என்றார்.
பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, இடதுசாரி தீவிரவாதத்தை எதிர்கொள்ளும் வகையில், பிரத்யேகமாக `தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டம்’ 2015-ல் வகுக்கப்பட்டதாகவும், அந்த கொள்கையை தீவிரமாக நடைமுறைப்படுத்தியதால் நக்ஸல் வன்முறைகள் நாட்டில் குறைந்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் தகவல் அளித்துள்ளார்.