
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தை அடுத்து, தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவை மாற்றியமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடன் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவை மாற்றியமைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய உளவு அமைப்பான ராவின் முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி ஆலோசனைக் குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் மறுசீரமைக்கப்பட்ட புதிய ஆலோசனைக் குழுவில் இனி 6 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முறையே பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள், இரு ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரி ஒருவர் என 6 பேர் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாகப் பதவி வகிப்பார்கள்.
இதன்படி, முன்னாள் தெற்கு பிராந்திய ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே. சிங், முன்னாள் மேற்கு பிராந்திய விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் பி.எம். சின்ஹா, ரியர் அட்மிரல் மோன்டி கன்னா ஆகியோர் பாதுகாப்புப் படைகள் சார்பில் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஓய்வுபெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் ரஞ்சன் வர்மா, மன்மோகன் சிங் மற்றும் ஓய்வுபெற்ற முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரி வெங்கடேஷ் வர்மா ஆகியோரும் ஆலோசனைக் குழுவின் புதிய உறுப்பினர்களாகியுள்ளனர்.
கடந்த 1998 டிசம்பரில் முதல்முறையாக தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவை அன்றைய மத்திய அரசு அமைத்தது. நாட்டின் பாதுகாப்பிற்கு நிலவும் அச்சுறுத்தல்கள் குறித்து பகுப்பாய்வு மேற்கொண்டு, அது தொடர்பான முன்மொழிவுகளை தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு வழங்குவது இந்த ஆலோசனைக் குழுவின் முக்கியப் பணியாகும்.
கடைசியாக கடந்த 2018-ல் ரஷ்யாவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் பி.எஸ். ராகவன் தலைமையில் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது.