
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது குறித்த அறிவிப்பை வரவேற்றாலும் இதற்கான கால நிர்ணயத்தை அறிவிக்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடியது. இந்தக் கூட்டத்தில் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்புக்கு காலநிர்ணயம் தேவை என முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்கள்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"ஒருவழியாக வரவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது. ஆனால், சில முக்கியக் கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கப்பெற வேண்டியுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கப்படும்? எப்போது நிறைவு செய்யப்படும்?
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பு தற்செயலானது அல்ல. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் சமூக நீதி முக்கியப் பங்கு வகித்து வருகிறது. எனவே, அரசியல் நோக்கத்துக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
மக்களைச் சாதியின் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் பிரிப்பதாக ஒரு காலத்தில் குற்றம்சாட்டிய பிரதமர், தற்போது அதே கோரிக்கைக்கு அடிபணிந்துள்ளார்.
இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நலன், உண்மையான சமூக நீதியைப் பின்தொடர, கொள்கைகளை வகுக்க சாதிவாரி கணக்கெடுப்பு என்பது அத்தியாவசியமானது தான். தமிழ்நாடு அரசுக்கும் திமுகவுக்கும் இது கடின உழைப்பால் கிடைத்த வெற்றி. சாதிவாரி கணக்கெடுப்பு கோரி சட்டப்பேரவையில் முதலில் தீர்மானம் நிறைவேற்றியது நாம் தான். பிரதமரைச் சந்தித்தபோதெல்லாம் இது குறித்து வலியுறுத்தியுள்ளோம். பல்வேறு கடிதங்களை எழுதியுள்ளோம். இதற்குப் பொறுப்பேற்குமாறு மத்திய அரசைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம்.
மாநில அளவிலான சாதிவாரி கணக்கெடுப்பு கோரி பலரும் கோரியபோது, கணக்கெடுப்பை மத்திய அரசு தான் நடத்த முடியும் என நாம் உறுதியாக இருந்தோம். திமுக மற்றும் இண்டியா கூட்டணிக்கு மீண்டும் ஒரு வெற்றி" என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
"நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம் என நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறோம். நரேந்திர மோடி மொத்தமே 4 சாதிகள் தான் என்று கூறுவார். என்ன நடந்தது என்று தெரியவில்லை. திடீரென 11 ஆண்டுகளுக்குப் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதை முழுமையாக ஆதரிக்கிறோம். ஆனால், இதற்கான கால நிர்ணயம் வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்பதைத் தெரியபடுத்த வேண்டும். இது முதல் நடவடிக்கை.
சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் வளர்ச்சிக்கான புதிய கண்ணோட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்பது எங்களுடைய கனவு. இடஒதுக்கீடு மட்டுமல்ல. நாட்டில் ஓபிசி, தலித், ஆதிவாசிகளின் பங்கு என்ன? சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் இது தெரிய வரும். ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பைக் கடந்து நாம் முன்னோக்கி செல்ல வேண்டும். தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீட்டைக் கொண்டு வர வேண்டும் என்பதும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தது. அது சட்டமாகவும் உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி - பாஜக அரசு அதை நடைமுறைப்படுத்தத் தொடங்க வேண்டும்" என்றார் ராகுல் காந்தி.