உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு: சுரங்க விபத்து குறித்து அமைச்சர்

2 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரகண்டின் சில்க்யாரா பெண்ட்-பார்கோட் சுரங்க இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்ட மீட்புக் குழுவினரும் இதில் பங்கேற்றுள்ளார்கள்.
உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு: சுரங்க விபத்து குறித்து அமைச்சர்
ANI
1 min read

தெலங்கானாவில் சுரங்க விபத்து இடிபாடுகளில் சிக்கியுள்ள 8 பேர் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று கருத்து தெரிவித்துள்ளார் தெலங்கானா அமைச்சர் ஜுபள்ளி கிருஷ்ணா ராவ்.

தெலங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்தும் வகையில் `ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய்’ கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கால்வாய்க்காக ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள தோம்மலபென்டா என்ற இடத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த வாரம் தொடங்கியது.

கடந்த சனிக்கிழமை (பிப்.22) அன்று, சுரங்கத்திற்கு உள்ளே 14-வது கிலோமீட்டரில் சுமார் 3 மீட்டர் அளவுக்கு சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானது. இதனால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் எஞ்சினியர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட 8 பேர் சிக்கிக்கொண்டார்கள். உடனடியாக அவர்கள் மீட்கும் பணி தொடங்கியது.

தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படைகள், இந்திய ராணுவத்தின் பைசன் பிரிவு மற்றும் 2 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரகண்டின் சில்க்யாரா பெண்ட்-பார்கோட் சுரங்க இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்ட மீட்புக் குழுவினர் உள்ளிட்ட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் உள்ள சவால்கள் குறித்து தெலங்கானா அமைச்சர் ஜுபள்ளி கிருஷ்ணா ராவ் கூறியதாவது,

`உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், சுரங்கத்தில் சிக்கியவர்கள் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பு மிக மிக மிக மிக குறைவு. ஏனென்றால், சுரங்கம் இடிந்த பகுதிக்கு 50 மீட்டர் முன்பு வரை நானே சென்றேன். புகைப்படம் எடுத்தபோது, சுரங்கத்தின் முடிவு தெரிந்தது.

சுரங்கப்பாதையின் 30 அடியில், ஏறத்தாழ 25 அடி வரை சேறு குவிந்துள்ளது. அவர்களின் பெயர்களை நாங்கள் சத்தமாக அழைத்துப் பார்த்தோம். எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை. எனவே (அவர்கள் பிழைத்திருப்பதற்கான) வாய்ப்பு இல்லை’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in