
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 14) வெளியாகியுள்ளன.
நாட்டிலுள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இருக்கும் இளநிலை மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்ட்வேதா, யுனானி மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
இந்நிலையில் வரும் 2025-26 கல்வி ஆண்டின் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு நடப்பாண்டில் 22.76 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில், 22.09 லட்சம் மாணவர்கள் கடந்த மே 4 அன்று நடைபெற்ற நீட் தேர்வை எழுதினார்கள். இந்நிலையில், இன்று (ஜூன் 14) தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய அளவில், மொத்தம் 12.36 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்து, தேசிய அளவிலும், மாநில அளவிலும் நடைபெறவுள்ள கலந்தாய்வுகளில் பங்குகொள்ள தகுதி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 1.35 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில், அதில் 76,181 பேர் தகுதி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
99.99% மதிப்பெண்கள் பெற்று ராஜஸ்தானைச் சேர்ந்த மகேஷ்குமார் தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சூரிய நாராயணன் என்கிற மாணவர் தேசிய அளவில் 27-வது இடத்தையும், மாநில அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.
இதற்கு அடுத்தபடியாக, தமிழகத்தைச் சேர்ந்த அபிநீத் நாகராஜ் என்ற மாணவர் தேசிய அளவில் 50-வது இடத்தைப் பிடித்துள்ளார். மேலும், முதல் 100 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
தேர்வு முடிவுகளுக்கு: nta.neet.nic.in