
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய நபர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்தார். இந்நிலையில் அவருக்கு அறிவுத்திறன் குறைபாடு உள்ளதாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்றைக்கு முந்தைய தினம் உள்ளூர் அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் ஆட்டம் நடைபெற்றது. அப்போது அதை கண்டுகளித்த கூட்டத்தில் இருந்த 36 வயது அஷ்ரஃப் என்ற நபர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் (வாழ்க) என்று முழக்கம் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
உடனடியாக அவருடன் சச்சின் என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து 20-க்கும் மேற்பட்டோர் கும்பல் அவரை சரமாரியாக தாக்கியதில் ரத்தப்போக்கு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக மங்களூரு காவல்துறையினர் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் 10-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர்.
இந்நிலையில், உயிரிழந்த அஷ்ரஃப் கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்றும், அவருக்கு அறிவுத்திறன் குறைபாடு உள்ளதாகவும், பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது சகோதரர் அப்துல் ஜப்பார் தகவல் அளித்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது,
`அஷ்ரஃபுக்கு எந்த அமைப்புடனும் தொடர்பில்லை. ஒரு கும்பல் அவரைத் தாக்கியதாகவும், அவர் இறந்துவிட்டதாகவும் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் இறந்தபிறகு இரண்டு மணிநேரம் வரை உடல் அந்த இடத்திலேயே இருந்துள்ளது. யாரும் அவரை அணுகவில்லை. உள்ளூர்வாசிகள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கலாம். அவரது மரணத்திற்கு இரத்தப்போக்குதான் காரணம் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது’ என்றார்.