
முர்ஷிதாபாதில் நிகழ்ந்த வன்முறையை பாஜக, ஆர்எஸ்எஸ் பயன்படுத்துவதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாதில் வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிராக கடந்த 11 அன்று ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் உயிரிழந்தார்கள். இதில் இருவர் தந்தை, மகன். பெரும் வன்முறையால் பெரியளவில் பொருள் சேதங்கள் ஏற்பட்டன. இதற்கு அஞ்சி பலர் அப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து சென்றதாகவும் செய்திகள் வந்தன. இதைக் கட்டுப்படுத்த மத்தியப் படைகளைக் குவிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிடும் அளவுக்குத் தீவிரமாக இருந்தது முர்ஷிதாபாத் நிலைமை.
இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி வெளிப்படையான கடிதத்தை எழுதியுள்ளார். அதில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ன் பிரிவினைவாத அரசியலை விமர்சித்துள்ளார்.
"மேற்கு வங்கத்தில் திடீரென பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அதன் கூட்டாளிகள் மிகவும் ஆக்ரோஷமாகச் செயல்படுகிறார்கள். தூண்டுதலின் பெயரில் நிகழ்ந்த துரதிருஷ்டவசமான சம்பவத்தின் பின்னணியை இவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். பிரிவினைவாத அரசியல் விளையாட்டை விளையாட இதைப் பயன்படுத்துகிறார்கள்.
அமைதி காக்க வேண்டும் என்பது தான் என்னுடைய வேண்டுகோள். வகுப்புவாத வன்முறைகளைக் கண்டிக்கிறோம். அவை கட்டுப்படுத்தப்பட வேண்டும். வன்முறைக்குக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுகிறார்கள். அதேசமயம், நாம் பரஸ்பரம் வைத்துள்ள அவநம்பிக்கைகளைத் தவிர்க்க வேண்டும். பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகத்தினர் ஒன்றிணைந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சட்டம் - ஒழுங்கைக் கடைபிடிக்க, மனித உயிர்கள் மற்றும் கண்ணியத்தைக் காக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம். பொறுப்பிலிருந்த இரு காவர் அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளார்கள். காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேற்கொண்டு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
அரசியல் எதிரிகளுக்கு கலவரத்தைத் தூண்ட வேண்டும். கலவரங்கள் அனைவரையும் பாதிக்கும். அனைவரையும் அன்புடன் அரவணைப்போம். அனைவரும் ஒன்றிணைந்து இருப்போம். கலவரங்களைக் கண்டிக்கிறோம். அதற்கு எதிரானவர்கள் நாம். குறுகிய தேர்தல் அரசியலுக்காக நம்மைப் பிரிக்க முயற்சிக்கிறார்கள்" என்று மமதா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.