
ஹிந்தி மொழியை முன்வைத்து நாட்டில் பிரச்னைகள் நடைபெற்றுவரும் வேளையில், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையில் ஹிந்தியை கட்டாய மொழிப்பாடமாக மஹாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது.
2025-26 கல்வி ஆண்டில் இருந்து தேசிய கல்விக் கொள்கையை மாநிலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான விரிவான செயல் திட்டத்தை மஹாராஷ்டிர மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு ஹிந்தி கட்டாய மொழிப் பாடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மஹாராஷ்டிரத்தில், 1-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மராத்தி மற்றும் ஆங்கிலம் என இரு கட்டாய மொழிப் பாடங்கள் உள்ளன. அதேநேரம், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையில் மூன்று கட்டாய மொழிப்பாடங்கள் உள்ளன.
தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு மராத்தி மற்றும் ஆங்கிலம் கட்டாய மொழிப் பாடங்களாக ஏற்கனவே இருக்கும் நிலையில், ஹிந்தி கட்டாய மூன்றாம் மொழிப்பாடமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆங்கில மற்றும் மராத்தியில் கல்வியைப் பயிற்றுவிக்கும் இரு வகைப் பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்திற்கு தயார்படுத்திக்கொள்ளும் வகையில், 80% ஆசிரியர்களுக்கு புதிய கற்பித்தல் முறைகளைப் பயிற்சி அளிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
2025-26 கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு தொடங்கி, 2028-29 வரை அனைத்து வகுப்புகளுக்கும் பொருந்தும் வகையில், தேசிய கல்விக் கொள்கை 2020 நடைமுறைப்படுத்தப்படும் என்று மஹாராஷ்டிர மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.