
நடப்பாண்டின் முழு சந்திர கிரகணம் இன்று இரவு 9.47 முதல் திங்கள் அதிகாலை 1.31 மணி வரை நிகழ்கிறது.
சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் அரிய வானியல் நிகழ்வு கிரகணம் எனப்படுகிறது. நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம். பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரணம்.
சந்திர கிரகணத்தின்போது, பூமியின் நிழலைக் கடந்து சந்திரன் கடக்கும்போது, மிகவும் ஆழமான சிவப்பு நிறத்தில் தோற்றமளிக்கவுள்ளது. இதன் காரணமாகவே இது பிளட் மூன் (ரத்த நிலவு) என்று அழைக்கப்படுகிறது.
சந்திர கிரகணத்தை இந்தியாவில் தில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து காணலாம். சந்திர கிரகணத்தை சிறப்புக் கண்ணாடி, டெலெஸ்கோப் இல்லாமல் நேரடியாகவே காணலாம். வானம் தெளிவாக இருந்தால் மட்டுமே போதுமானது.
இருந்தபோதிலும், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்களில் சந்திர கிரகணத்தைக் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரவு 9.47 முதல் திங்கள் அதிகாலை 1.31 மணி வரை நிகழ்வதால், நீண்ட நேரம் நிலவும் சந்திர கிரகணமாக இது அமைகிறது.
சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருத்தணி, பழனி முருகன் கோயில்கள், தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட பெரும்பாலான கோயில்களில் பக்தர்களின் தரிசன நேரம் மாற்றப்பட்டுள்ளது. சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோயில் நடைகள் அடைக்கப்படவுள்ளன.
இந்தியா மட்டுமில்லாது உலகின் பல்வேறு பகுதிகளிலும் சந்திர கிரணத்தை நேரடியாகப் பார்க்கலாம்.
Lunar Eclipse | Blood Moon |